ஆத்ம ஸ்வரூபமாய் இருந்து இப்புவியில் உடலெடுத்த மறுகணமே மனிதனின் கர்மவினை தொடங்கிவிடும். மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் அகங்காரம் என்பது சக்தியின் ஸ்வரூபமாய் அவரவரவர் தன்மையைப் பொறுத்து வெளிப்படும். அத்தகைய மாபெரும் சக்தியை தவத்தால்/யோகத்தால் அகத்தில் செலுத்தி சிவத்துடன் இணைத்தால் முக்தியாகும். ஆனால் பாமரனுக்கு இது சாத்தியமில்லை. ஆனால் மனிதன் முக்தி நிலையை அடைய நான்கு விதமான மார்க்கங்கள் உண்டு. அது சைவ நாற்பாதங்கள் என்றழைக்கப்படும்.
சைவ நாற்பாதங்கள் என்பது மனிதன் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் திருவடியை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதனை சைவ நன்னெறிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் எனவும் கூறப்படுகிறது. அவை,
1. சரியை - பக்திமார்கம்
2. கிரியை - கர்மமார்க்கம்
3. யோகம் - சகமார்க்கம்
4. ஞானம் - சன்மார்க்கம்
1. சரியை (பக்திமார்கம்):
சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவாக செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும்.
ஆலயங்களில் இறைவனை மனமுருகி வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவையும் சரியையில் அடங்கும்.
சரியையின் நாற்படிகள்:
அ. சரியையிற் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.
ஆ. சரியையிற் கிரியை - ஒரே ஒரு மூர்த்தியை வழிபடல்.
இ. சரியையில் யோகம் - வழிபடும் கடவுளை தியானித்தல்.
ஈ. சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.
(திருநாவுக்கரசர் சரியை நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).
2. கிரியை (கர்மமார்க்கம்):
கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக வேத சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்று மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியை நெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறிக்குள் அடங்கும்.
திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல் (பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும். செய்யும் செயலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தலும் கர்மமார்க்கமேயாகும்.
கிரியையின் நாற்படிகள்:
அ. கிரியையிற் சரியை - பூசைப் பொருட்களைத் திரட்டல்.
ஆ. கிரியையிற் கிரியை - புறத்தில் பூசித்தல்.
இ. கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.
ஈ. கிரியையில் ஞானம் - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.
(திருஞானசம்பந்தர் கிரியை நெறியில் நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).
3. யோகம் (சகமார்க்கம்):
யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி (வாசி) ஆகிய "அட்டாங்க யோகங்கள்" உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.
யோகத்தின் நாற்படிகள்:
அ. யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.
ஆ. யோகத்திற் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.
இ. யோகத்தில் யோகம் - தியானம்
ஈ. யோகத்தில் ஞானம் - சமாதி
(சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).
4. ஞானம் (சன்மார்க்கம்):
ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பணம் செய்து "சதாசிவபிரம்மேந்திரமாக" இருத்தல் ஆகும். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் அறிந்து இறையின் அம்சமாகவே மாறுதல். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முந்தைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.
ஞானத்தின் நாற்படிகள்
அ. ஞானத்திற் சரியை - ஞான நூல்களைக் கேட்டல்.
ஆ. ஞானத்திற் கிரியை - ஞான நூல்களைச் சிந்தித்தல்.
இ. ஞானத்தில் யோகம் - ஞான நூல்களால் தெளிதல்.
ஈ. ஞானத்தில் ஞானம் - ஞான நிஷ்ட்டை கூடல்.
(மாணிக்கவாசகர் ஞான நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்)
Edited by
C.S.மல்லீஸ் குமார்
சென்னை
No comments:
Post a Comment