Monday, 28 September 2020

ஆன்மீக ஆலாபனைகள்

"ஆன்மீகம்" என்பது நபருக்கு நபர் வேறுபடும். அதாவது பக்தி, கர்மம், யோகம், ஞானம் என அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு ஆன்மீகப் புரிதல் இருக்கும். பெரும்பாலான ஆன்மீகவாதிகள் பக்தி மார்க்கத்தையே கடைபிடிக்கின்றனர். காரணம், அதுவே ஆன்மீகத்தின் அடிப்படையுமாகும். அதன் இறுதிநிலை என்பது சரணாகதியாகும்.

ஆன்மீகம்:

"நம் மூலத்தை நோக்கிய பயணமே ஆன்மீகமாகும்". காலத்திற்கு ஏற்றவாறு ஆன்மீகப் பயணத்தில் மேற்கூறிய படிகளுண்டு. ஆனால், அந்த மூலம் என்பது இறைவன், பிரம்மம், சிவன், ஆன்மா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், தவிர அதுவே முதன்மையாகும்.

கலியுகத்தில் ஆன்மீகம்:

கலியில் ஆன்மீகம் என்பது மாயையாகவே சித்தரிக்கப்படுகிறது. அதாவது அருவுருவற்ற இறைவனுக்கே உருவம் தரித்து வழிபடும் தன்மை பிரதானமாயிருக்கிறது. காரணம், மனமாகிய மாயைக்கு ஒரு கற்பனை உருவம் தேவைப்படுகிறது. அப்படியிருந்தால் மட்டுமே அது இறைவனை நிந்திக்கும். அதுவே மனத்தின் இயல்பும்கூட. இதுகூட நபருக்கு நபர் அவரவர் புரிதல் உணர்தலைப் பொருத்து வேறுபடும். அதாவது சிலர், இருக்கும் இடத்திலிருந்தே அகத்தில் இறைவனை உணர்ந்து ஏகாந்தத்தில் திளைப்பர், ஆனால் சிலருக்கு சிலையோ அல்லது படத்தையோ பார்த்தால்தான் பக்தி உருவெடுக்கும். இவையெல்லாம் முழுக்க முழக்க மனத்தின் மாயை சார்ந்த விசயங்களே!

முனிவர்கள்

அவரவர் இருக்கும் இறைநிலைத் தன்மையைப் பொறுத்து பெயர்கள் வேறுபடும் அதாவது கிரகஸ்தன், உபாசகர், யோகி, சாமியார், துறவி, சந்யாசி, தபசி, முனிவர் சித்தர், பித்தர், மஹரிஷி மற்றும் தேவர்கள் என வேறுபடும். ஆனால் அக்காலத்திலிருந்த ஆன்மீகவாதிகள் உடுத்தும் உடைகளுக்கும் வேஷங்களுக்கும் காரண/காரியமிருந்தது. அதாவது பிரபஞ்ச சக்தியை ஈர்க்க குடுமியும், தாடியும், தன்னில் இருக்கும் இறைசக்தி உச்சந்தலை (பத்தாவது வாசல்) வழியாக வெளியேறாமல் இருக்க உச்சிக்குடுமியும், விந்துவைக் கட்ட கோவணமும், மந்திர உச்சாடனைகளை எண்ண மணி மாலையும், பிரபஞ்ச சக்தியை தன்னுள் ஈரக்க நவக்கிரக மற்றும் ருத்ராக்ஷ கொட்டைகளும், உடலில் வியர்வை தங்காமலும், ஈரத்தை உறிஞ்ச விபூதி பட்டைகளும், உடலை குளுமையாக்க சந்தனமும் தரித்தனர். ஆனால், இவை அனைத்துமே சில குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டவை. காரணம் காடுகளிலும், மலைப் பாறைகளிலும், கடுங்குளிரிலும் இருப்பவர்களுக்கே இது விசயமாகும்.

நவீன சாமியார்கள்:

தாடியும் குடுமியும் வளர்த்து பட்டை போட்டு, கொட்டையிட்டு, காவியுடுத்தினால்தான் இறைநிலை வாய்க்குமா..? அப்படியிருந்தால்தான் ஆன்மீகத்தின் உச்சநிலையை தொட இயலுமா..? இல்லை, காரணம் அவையெல்லாம் மேற்சொன்ன அடிப்படை ஆன்மீக விசயங்களுடன் சேர்த்து, நான் இயமம், நியமம், பிரத்தியாகாரம், தாரணை, பக்தி, யோக, தியான மற்றும் சன்மார்க்க நெறிகளைக் கடைபிடித்து உணவு, உடை, இருப்பிடம் மற்றும் செயல்பாடுகள் என அனைத்து விதங்களிலும் உங்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாகவும், மந்திரம், பூஜை, ஹோமம் என்கிற வேத சம்பத்துக்களைக் கடைபிடித்து அனுஷரிப்பதால் எம்மைவிட்டு சற்று விலகி இருப்பாயாக, காரணம் என்னுடைய இறைசக்தி நிலை உங்களால் தடைபடக்கூடாது என்பதை உணர்த்தும் சமிக்கைகளே, தவிர அது மட்டுமே இறைநிலையாகாது. இன்னும் சரியாகக் கூறவேண்டுமெனில் "அரை நிர்வானக் கோவணமும், முழுநிர்வாணமுமே" ஆன்மீகத்தின் நிரந்தர ஆடையாகும்.

ஆன்மீக ஸ்வரூபிகள்:

மஹா அவதார் பாபா, ஆதிசங்கரர், புத்தர் மற்றும் அருட்பிரகாச வள்ளலார் போன்றோர் மேற்கூறிய சாயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உச்சகட்ட இறைநிலை அடைந்தவர்கள். காரணம், அவர்கள் ஞானத்தால் அகத்திலிருக்கும் இறைவனை (ஆன்மா) உணர்ந்து இறைவனாக மாறியவர்கள். இதற்கு எந்த விதமான விளக்கமோ, வியாக்கானமோ தேவைப்படாது. அதாவது, அகத்தை நோக்கிய பயணத்தில் ஒரு நிலையிலிருந்து அடுத்தநிலை வியாபிக்குமே, தவிர வேஷம் தரிப்பது என்பது எம்மிடமிருந்து விலகி இரு என்பதை அறிவறுத்தவே என்றுகூறி நிறைவு செய்கிறேன், நன்றி!

குறிப்பு: வேஷம் தரிக்ககூடாது என்பது பதிவின் நோக்கமல்ல, தவிர ஏன் மற்றும் எப்போது தரிக்கவேண்டும் என்பது பற்றி அறியாதவர்களுக்கு இது ஒரு பயனுள்ள பதிவாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

No comments:

Post a Comment