Monday, 28 September 2020

உலகத்தமிழ் ஜோதிடர்கள் மஹாசபையின் சென்னை கருத்தரங்கில் யாம் ஆற்றிய உரை

முன்னுரை: ஆன்மீகம்/ஜோதிடம்/பரிகாரம் என்றால் என்ன, அவற்றிற்குள்ள தொடர்புகள் யாவை, அவை நமக்கும் நம் செயல்பாடுகளுக்கும் எவ்வாறு காரணமாகின்றன என்பது பற்றி விரிவாகக் காணலாம்.

1.ஆன்மீகம்:

ஆன்மீகம் என்றதும் நம் மனதில் தோன்றுவது "#இறைசக்தி". அவ்விறை சக்தியே ஆன்மீகத்திற்கு பிரதானம். அதாவது நம்மை எது இயக்குறதோ அல்லது நாம் இயங்க எது காரணமாய் இருக்கிறதோ அதைத்தேடிய பயணம்தான் "#ஆன்மீகம்". இறைவன் எங்கும் இருக்கிறார், அதாவது அகத்திலும் இருக்கிறார், புறத்திலும் இருக்கிறார், எனில் எப்படி இருக்கிறார்..? "சத்" ஆகிய #ஒளியாகவும், "சித்" ஆகிய #ஒலியாகவும் ஒன்று சேர்ந்து #ஓம்காரமாகவும் மண், நீர், நிலம், காற்று, ஆகாயம் என்கிற பஞ்சபூத தத்துவங்களான #நமசிவாயமாய் அகமும், புறமும், எங்கும் பரிணமித்திருக்கிறார். இங்கு "ஒளி/ஒலி" என்பது இறைவனின் சூட்சும வடிவம், அதுபோல பஞ்சபூதமென்பது இறைவனின் ஸ்தூல வடிவம். அப்படியான இறைசக்தியை புறத்தில் தேடினால் அது #பக்திமார்க்கம், மாறாக அகத்தில் தேடினால் அது #ஞானமார்க்கம். இதை ஜோதிட முறையில் கூறவேண்டுமெனில், "நான்" என்பது #தன்னிலை−1ம் பாவம், அத்தன்னிலையின் எதிர்பாவமான 7ம் பாவம், #முன்னிலை. இதில் 7ம் பாவத்திலிருந்து 12ம் பாவத்தை நோக்கிய ஆரோகணப் பயணமான அடைதல்/பெறுதல் என்பது பக்திமார்க்கம், அதுவே 7ம் பாவத்திலிருந்து 1ம் பாவத்தை நோக்கிய அவரோகணப் பயணமான துறத்தல், இருத்தல் என்பது ஞானமார்க்கம், இவையெல்லாம் தான் ஆன்மீகமும், அவை சார்ந்த விசயங்களும்.

2.ஜோதிடம்:
ஜோதிடம் என்றதும் நாம் புறத்தில் 360 பாகைகள் கொண்ட ஒரு கற்பனை வட்டத்தில் 12 ராசிகளை வரைந்து, அதில் 27 நட்சத்திரங்களை 108 நட்சத்திரப் பாதங்களாக உள்ளடக்கி, அதன்மேல் 9 கிரகங்கள் வலம் வருவதுதான் ஜோதிடமா..? இல்லைவே இல்லை, அது "வானியல் சாஸ்திரம்". எனில் எது ஜோதிடம்...? ஜோதிடம் என்பது #சார்புடைமை (relativity), அதாவது அகத்திற்கும் புறத்திற்கும் இடையேயுள்ள தொடர்புதான் ஜோதிடம். உதாரணத்திற்கு #ஆத்மகாரகன்−சூரியன்; #மனோகாரகன்−சந்திரன், எனில் புறத்திலிருக்கும் சூரியன்/சந்திரனுக்கும், அகத்திலிருக்கும் ஆன்மா/மனத்திற்கும் என்ன தொடர்பு இருக்கிறது..? இருக்கிறது, அது யாதெனில் புறத்தில் #சூரியன்−வெப்பம்; அகத்தில் #ஆன்மா−வெப்பம், ஆக வெப்பம் என்கிற தன்மை அகமாகிய ஆன்மாவிற்கும், பறமாகிய சூரியனுக்கும் சார்புடைய காரணியாக இருப்பதால் "சூரியன்−ஆத்மகாரகரானார்". அதுபோல போல புறத்தில் சந்திரனின் சலனமாக காலமும், அகத்தில் மனத்தின் சலனமாக காலமும் இருப்பதால், இங்கு #காலம் என்பது மனதுக்கும், சந்திரனுக்கும் சார்புடைய காரணியாகி "சந்திரன்−மனோகாரகரானார். ஆக இவைதான் ஜோதிடவிளக்கமும், அதன் சார்புடைய விசயங்களுமாகும்.

ஜோதிடம் எங்கு/எப்படி செயல்படுகிறது..?

ஜோதிடம் என்பது அகத்திற்கும்/புறத்திற்கும் சார்புடமையான காரணியெனில் அது செயல்படும் இடம் என்பது உயிரோட்டமான நாமகத்தான் இருக்கவேண்டும். அதாவது, புறத்தில் என்னவெல்லாம் இருக்கிறதோ அதுவெல்லாம் அகத்திலும் இருக்கிறது. அதாவது புறத்தில் பாவிக்கப்படும் 12 பாவங்கள் (ராசிகள்) அகத்திலும் இருக்கிறது, மேலும் புறத்தில் 360 பாகைகளுக்குள் அடங்கியிருப்பதாக கருதப்படும் 108 நட்சத்திர பாதகங்களும், அகத்தில் 108 பிரதான நாடிகளாய் இருக்கிறது. அதுபோல, புறத்திலிருக்கும் ஒன்பது கிரங்களும், அகத்திலும் சூரிய/சந்திர கலைகளாகவும், ஆதாரச் சக்கரங்களாவும் செயல்படுகிறது. அதாவது வெளியே ஒரு கிரகம் இருக்கிறது எனில், அக்கிரகத்தின் ஒளி/மின்காந்த கதிர்வீச்சை கிரகிக்கக்கூடிய பொருள் அகத்திலும் இருந்தால் மட்டுமே அக்கிரகத்தின் தன்மைகள் நம்மில் பரிணமித்து, நமக்கும் நம் செயல்பாடுகளுக்கும் காரணமாயிருக்குமே, தவிர சம்பந்தமில்லா அல்லது தொடர்பில்லா ஒரு பொருள் காரண/காரியமாக இருக்க வாய்பே இல்லை.

மேலும் கிரகங்களின் அதிர்வலைகள் நிலைசக்தியான (static energy) ஒளியாயால்  (photons) கவரப்பட்டு, இயங்குசக்தியான (kinetic energy) ஒலியால் (சப்த/ஸ்வரம்) இவ்வளியெங்கும் கடத்தப்படுகிறது. அப்படியான கதிர்வீச்சுகள் நம்மில் தொடர்புபடுவது ஐம்புலன்களினூடேயாகும், அதில் சுவாசமே பிரதானம். காரணம் ஒரு குழந்தை ஜனித்து, அது எடுக்கிற முதல் சுவாசமே லக்கினமாகிய உயிர்/ஸ்தானம், எனில் அச்சுவாசம் வழியாகத்தான் இப்பிரபஞ்ச விசயங்கள் நம்மில் ஊடுருவி, நம் உடலின் ஆதாரச் சக்கரங்களில் கடைதலுண்டாகி, நாடிகளின் வழியே உடலெங்கும் பரிணமிக்கிறது. அதுபோலவே, கிரகங்களின் பார்வை என்பதும் நம்முள் இருக்கும் அப்பாவங்களின் தன்மைகள், அது தொடர்புடைய கிரக கதிர்வீச்சுக்களை, சுவாசத்தால் உட்கிரகிக்கப்படு செயல்படுகிறதே, தவிர புறத்தில் எந்தக்கிரகமும் ஒன்றையொன்று பார்த்துக்கொள்வதுமில்லை, அதனால் நமக்கும் எந்தப் பயனுமில்லை. இப்படியாகத்தான் அனைத்து கிரகதன்மைகளும் நம்மில் உட்கிரகிக்கப்பட்டு செயல்படுகிறது.

#பரிகாரம்:

நாம் காலத்தில் பயணிப்பதால் பரிகாரம் என்பது காலத்தை உள்ளடக்கியது. அக்காலமானது நம்மில் கர்மாவாய் பரிணமித்திருக்கிறது. அதாவது, கர்மா என்பது  நமக்கு விசயமாகும்போது அது காலத்தால் பல பரிமாணங்களைக் கொண்டுள்ளது. ஏனெனில், காலத்திற்கு அப்பாற்ப்பட்ட கர்மச்செயல்பாடுகள் இவ்வுலகில் எதுவும் இல்லை. ஆக, காலமாகிய கர்மாவின் பரிமாணங்களை மூன்று வகையாகச்சொல்லாம், அவை

1. #சஞ்சீதம் (முன்பிறவி/இறந்தகாலம்)
2. #பிரார்ப்தம் (காமிய−நிஷ்காமிய கர்மா)
3. #ஆகாமியம் (எதிர்காலம்/அடுத்தபிறவி)

இதில் சொல்லப்படும் பரிகாரம் என்பது எதிர்காலமாகிய  ஆகாமியத்தில் அடங்கும். இதுவே அடுத்த பிறவிக்கு சஞ்சீத கர்மாவாகக் கொண்டு செல்லப்படும். மேலும், எந்தப் பரிகாரம் எங்கு, எப்படிச் செய்யவேண்டும், அது எவ்வாறு வேலை செய்யும் என்பதெல்லாம் அதை சரியாக கணித்துக்கூறுவரிடத்தில் தான் உள்ளது, தவிர நம்மில் செயல்படும் பரிகாரம் என்பது நிதர்ஷனம். உதாரணம், ஒருவருக்கு உடலில் விட்டமின் A குறைவு எனில், விட்டமின் B மாத்திரையை சாப்பிட்டால் உடலுக்கு விட்டமின் A கிடைத்துவிடாது, அது சரியான பரிகாரமும் ஆகாது. எனவே பரிகாரம் என்பது எதைச் சார்ந்தது என்பதன் அடிப்படைப் புரிதலும் நமக்கு மிக அவசியமாகிறது.

அதாவது பரிகாரம் பற்றி பலருக்கும் பலவிதமான மாற்றுக்கருத்து உண்டு. அது என்னவெனில், விதிக்கப்பட்ட கட்டமைப்பை  பரிகாரத்தால் மாற்றியமைக்கவே இயலாது என்பதேயாகும். ஆனால், பரிகாரத்தால் மாற்றியக்கக்கூடிய கர்ம செயல்பாடுகளும் நம்மில் உண்டு. அதன் தெளிவை கீழே காணலாம்.

1. சஞ்சீதம்/ஜாதகம் − இது கர்மவினையால் விதிக்கப்பட்ட ஜனனகால கிரக அமைப்பு, இதை ஸ்தூலம் அழியும் வரை யாராலும் மாற்ற இயலாது

2. பிரார்ப்தம்/கோள்சாரம் − இது சஞ்தீதத்தால் விதிக்கப்பட்டதன் தற்சமய நிகழ்வு ஆகும்.

3. ஆகாமியம் − தசா/புக்தி/அந்தரம், இதுவே பரிகாரத்தை செயல்படுத்தப் பயன்படும் எதிர்காலக் கர்மவினையாகும்.

ஏனெனில் தசா, புக்தியப் பயன்படுத்தாமல் எதிர்காலப் பலன்களைச் சொல்லமுடியாது, எனில் தசா/புக்தி என்பது யாது..?

தசா/புக்தி என்பது நம் அகத்தின் நாடியாகும். அதாவது, நம் ஜீவனானது நம் ஸ்தூலத்துடன் பந்தனப்பட்டு நாடிகளாய் இயங்குகிறது, இதுவே நாடிபந்தனமாகும். இங்கு, ஜீவனாகிய−ஆன்மா என்பதும், ஜீவநாடியாகிய−நாடிபந்தனம் (உடலுடன்/ஆன்மா) என்பதும் வேறு வேறு என்பதன் புரிதலும் மிக அவசியம். இப்போது ஒருவருக்கு புதன்/திசை நடக்கிறது என்றால் அவருக்கு புதன் நாடி பிரதானமாகவும், சனி/புக்தி நடக்கிறது எனில் அதனைத்தொடர்ந்து சனி நாடியும், அப்படியாக ஏனைய கிரங்களின் நாடிகளும் உடலில் ஓடுகிறது என்று அர்த்தம்.

அதாவது, விம்சோத்தரி தசையில் 120 ஆயுள் கணிதம் எவ்வாறு வந்தது..? ஆயுள் எனில் சுவாசமும் இருக்கவேண்டும்தானே, அப்போ சுவாசமெனில் நாடிகளின் இயக்கங்களும் அங்கு வந்துவிடும்தானே..? எனவே நாம் செய்யும் அத்துனை விசயங்களையும் நாடிகளால் மாற்றியமைத்து, நமக்குத் தேவையான தன்மையை நம் உடலில் நிலைநிறுத்திக்கொள்ள முடியும்தானே...? இதுதானே பரிகாரம் என்பதும்..? மேலும் மேற்கூறிய பிரபஞ்ச விசயங்கள்தான் நாடிகளில் கடைதலுண்டாகி உடலில் உட்கிரகிக்கப்படுகிறது, அற்றின் ஏற்ற/இறக்கங்கள்தானே நம் உடலின் தன்மையில் பல மாற்றங்களை (நோய்) உண்டுபண்ணுகிறது, ஆக கோவில்களில் தீர்மானிக்கப்ட்டிருக்கும் பஞ்சபூத/நவக்கிரகத் தன்மையை உட்கிரகித்து நாடிகளின் தன்மையையும் மாற்றியமைக்க முடியும் என்பது நிதர்ஷனமான உண்மை.

உதாரணமாக நாம் நின்றால், நடந்தால், படுத்தால், ஓடினால் நாடிகளும் மாறி ஓடும், அது போல குளிர்ந்த நீரைப் பருகும்போது ஒருவித நாடியும், வெந்நீரைப் பருகும்போது வேறுவிதமான நாடியும் மாற்றி ஓடுகிறது என்றால், நாம்/நமக்குத்தேவையான விசயங்களை நாடிகளில் நிலைநிறுத்தி, நம் உடலின் தன்மையை மாற்றியமைக்க இயலும்தானே, ஆக பரிகாரம் செயல்படுகிறதா/இல்லையா என்கிற ஐயம் நமக்கு ஏற்படக்கூடாது, தவிர நாம் கூறும் பரிகாரமென்பது சரியானதா என்பதுதான் இங்கு மிக முக்கியம்.

#முடிவுரை: இப்போது பாருங்கள் அகம் மற்றும் புறத்தின் சூட்சும விசயமான ஒளி/ஒலித் தன்மைகளும், ஸ்தூலமான பஞ்சபூத/நவக்கிரகத் தன்மைகளும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்திருக்கிறது எனில் நான் மேற்கூறிய ஆன்மீகம்/ஜோதிடம்/பரிகாரம் ஆகிய மூன்றும் ஒன்றோடொன்று தொடர்புபடுகிறது என்பதையும் அறியவேண்டும், இச்சிருஷ்டியும் அப்படியாகத்தான் படைக்கப்பட்டிருக்கிறது என்பதையும் நாம் உணரவேண்டும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

ஜீவன் முக்திக்கான ஜாதக அமைப்பு

இப்பிறவியிலேயே பிறப்பறுக்கும் ஜாதக அமைப்பாக லக்கினத்திற்கு 12ம் வீட்டில் கேது இருந்தால் முக்தி என ஜோதிடத்தில் கூறுவர். ஆனால், 12ல் கேது இருக்கும் அனைவரும் இப்பிறப்பிலேயே முக்தியடைவர் எனக் கூறமுடியாது. ஆனால், முக்திக்கான தூரத்தை நெருங்கிவிட்டனர் எனலாம். அதாவது, அடுத்த சில பிறப்பிற்கு பிறகு ஜீவன் முக்தியடைய வாய்புண்டு. இருப்பினும், எம்மாதிரியான ஜாகத அமைப்பு இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி என்பதைக் காணலாம்!

1. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் வீட்டில் தனது சுய சாரமான அஸ்வினி/மகம்/மூலத்தில் இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி

2. கேது பகவான் லக்கினத்திற்கு 12ல் அவ்வீட்டு அதிபதியுடன் சேர்ந்து இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி

3. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் அதிபதியின் சாரத்தில் எங்கிருந்தாலும் இப்பிறவியிலேயே முக்தி (யோகிகள் மற்றும் ஞானிகளின் ஜாதகத்தில் இந்த அமைப்பைக் காணலாம்)

4. கேது பகவான் லக்கினத்திற்கு 12ம் வீட்டில் கர்மக்காரகன் சனியின் சாரமான பூசம்/அனுஷம்/உத்திரட்டாதியில் அல்லது காலனுக்கு 12ம் அதிபதி குருவின் சாரமான புனர்பூசம்/விசாகம்/பூரட்டாதியில் இருந்தால் இப்பிறவியில் முக்தி

5. லக்கினத்தின் மோட்சாதிபதி ஞானக்காரன் கேது அல்லது கர்மக்காரகன் சனியின் சாரத்தில் இருக்க இப்பிறவியிலேயே முக்தி

6. கேது பகவான் லக்கினத்திற்கு 12ல் குரு அல்லது சனியுடன் சேர்ந்து இருந்தால் இப்பிறவியிலேயே முக்தி

7. கால புருஷனுக்கு தர்ம/கர்மாதிபதிகளான குருவும் சனியும் லக்கினத்திற்கு 12ல் இருக்க இப்பிறவியிலேயே முக்தி

8. ராசியிலும் நவாம்சத்திலும் கேது லக்கினத்திற்கு 12ம் வீட்டில் இருந்து வர்கோத்தமமாக இப்பிறப்பிலேயே முக்தி

9. சனியும் சந்திரனும் சேர்ந்து லக்கினத்திற்கு 12ல் இருக்க இப்பிறவியிலேயே ஜீவ முக்தியாம்!

இதுபோல இன்னும் பல!!!

#குறிப்பு:  மேற்கண்ட ஜாதக அமைப்பை லக்கினத்திற்கு மட்டுமே பார்க்கவேண்டுமே, தவிர ராசிக்கு பார்க்ககூடாது. ஏனெனில், ராசியான உடல் இறப்புக்கு மட்டுமே விசயம். அதனால், ஜீவன் முக்திக்கு லக்கினத்தை வைத்துதான் கணக்கிட வேண்டும்!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சனியின் சாரத்தில் சூரியன் இருந்தால்

சனியின் நட்சத்திரமான பூசம் / அனுஷம் / உத்திரட்டாதியில் "சூரியன்" இருக்கப் பிறந்தவர்கள் சமுதாயத்தில் நல்ல மதிப்பு மரியாதைப் பெற்றிருந்தாலும் இரத்த பந்த உறவுகளின் நயவஞ்சக துரோகம், தாமத திருமணம் அல்லது பற்றற்ற கணவன் / மனைவி, தொடர் உடல் உபாதைகள், ஜென்ம விரோதிகளின் தொல்லை மற்றும் குடும்ப சொத்து, வழக்குகள் மற்றும் அவமானங்கள் போன்றவற்றிலிருந்து ஒருபோதும் விலகி நிற்க இயலாது. இது ஜாதகத்தில் சனி மற்றும் சூரியன் இருக்கும் பாவகத் தொடர்புகளைப் பொறுத்து அதற்கான பலன்களை இப்பிறவியில் அனுபவித்தே ஆகவேண்டுமென்பது இப்பிறப்பின் பிராப்த கர்மாவாகும்!!!

பரிகாரங்கள்

1. பேரளம் − திருமீயச்சூர் மேகநாதர் / லலிதாம்பிகை திருக்கோவிலில் அதிகாலை தரிஷனம்

2. சென்னை − வியாசர்பாடி / ரவீஸ்வரன் திருகோவிலில் அதிகாலை தரிஷனம்

3. கும்பகோணம் − திருமங்களக்குடி / சிவசூரியனார் திருகோவிலில் அதிகாலை தரிஷனம்

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

குருவின் சாரத்தில் சூரியன்

சமுதாயத்தில் நன்மதிப்பும், அந்நியர்கள், வயதில் பெரியவர்கள் மற்றும் குருமாரர்களின் அன்பும் ஆசியும், நல்ல கற்பனைத் திறனும், தெளிவான சிந்தனையும், களிறு போன்ற ஞாபக சக்தியும் உண்டாகும். இது தவிர, வேத சாஸ்திர மந்திரங்களில் ஆர்வமும், சிவ தீட்சையும், வாக்கு பலிதமும், தாமத் திருமணமும், இல்லறத்தில் நல்லறமும், மற்றவர்களை எளிதில் நம்பிவிடும் குணமும் இருக்கும். மேலும், பிராமணர்கள், சமுதாயத்தில் பெரிய மனிதர்களின் நட்பு, குறுகிய  ஆன்மீகப் பயணங்கள் மற்றும் உபதேசங்கள் போன்ற தன்மைகள் நிலவும். மேலும், தாய் தந்தையரின் அன்பும் ஆதரவும், தாய்வழி அசையும் / அசையா சொத்துக்கள் கிடைக்கப்பெறும்!!!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

யோகியர் ஜாதகம் (ஜோதிடர்களுக்கான பதிவு)

ஒரு ராசியில் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் வாழ்வில் பல துயரங்களை அடுக்கடுக்காக சந்திக்க நேரிடும். இவர்களின் வாழ்வாதாரம் மற்றவர்களைப் போன்று சாதாரணமாக அல்லாமல், அன்றாட வாழ்வில் சந்திக்கும் நிகழ்வுகள் யாவும் வித்தியாசமானதாகவே இருக்கும். இதுதவிர, வாழ்நாளில் ஒருமுறையாவது மரணத்தின் விளிம்பு வரை சென்று திரும்பியிருப்பார்கள் அல்லது வாழ்வின் உச்சத்திலிருந்து அடிமட்டத்திற்கு வந்திருப்பார்கள். சிலருக்கு, சகல வசதிகள் இருந்தும் திடீரென நடு வீதிக்கு வரும் நிலைமைகூட ஏற்பட்டுவிடும். சிலரோ, பிறந்ததிலிருந்து கடும் துன்பங்களை மட்டுமே சந்திந்திருப்பார்கள். ஆனால், இத்தனை துன்பங்களையும்,  வலிகளையும் எதிர்கொள்ளும் இவர்கள் யோகியாவர். பெரும்பாலும் யோகிகளுக்கும், ஞானிகளுக்குமே இம்மாதிரியான அமைப்புகள் இருக்கும். அதனால், இவர்களின் ஜாதகத்தை ஆய்வு செய்யும்போது மற்ற ஜாதகங்களைப் போல மேலோட்டமான ஜோதிட விதிகளைக் கொண்டு அவசர அவசரமாக பலன்கூறினால் அது முற்றிலும் பொய்த்துவிடும். தவிர, கூட்டு கிரகங்களின் சேர்க்கையை, அவை நின்ற பாவம், ஏறிய சாரம் மற்றும் பாகைகள் முறையே கிரக யுத்தம், அஸ்தங்கம் மற்றும் நவாம்சபாதையில் அக்கிரகங்களின் இருப்பு ஆகியவற்றை மிகவும் நுட்பமாய் ஆய்வு செய்து பலன்களைத் தீர்மானிக்க வேண்டும்!!!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

மந்திரவுடல்

இப்பிரபஞ்சம் முழுவதும் ஒளியாலும், ஓசையாலும் நிரப்பப்பட்டுள்ளது. இப்பிரபஞ்சத்தின் அங்கமான நமது உடலும் மூல மந்திரமான ஓம்கார நாதத்தால் கட்டப்பட்டுள்ளது. அதுவே இப்பிரபஞ்ச பேராற்றலின் உயிர்நாடியுமாகும். இருப்பினும், இம்முலத்திலிருந்து விரிந்த கிளை மந்திரங்கள் ஏராளம். அதாவது, நமது உடலின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு விதமான பீஜத்தை தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கும். அதையே நாம் உடலின் நாடிகள் எனவும் கூறுகிறோம். அப்படியாக நமது உடலில் இருந்து வெளிப்படும் ஒட்டுமொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 72,000. அதில் பிரதானம் 108, இவை அனைத்தும் இயங்க காரணமாய் இருக்கும் மூலம் ஒன்றாகும். இப்படியாக பஞ்ச பூதங்களுடன் / ஒலி வடிவம் இணையப்பெற்று இயங்குவதாலேயே வேத சாஸ்திரம் என்பது மந்திர வடிவங்களாய் இருக்கிறது. அவை நம் உடலுக்கு விசயம். உடல் உயிருக்கு விசயம்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

திரிகோணாதிபதிகள் (1,5,9)

ஒரு ஜாதகத்தின் Pilot என்று அழைக்கப்படும் லக்கினாதிபதியும் Co-pilots என்றழைக்கப்படும் ஐந்து மற்றும் ஒன்பதாம் அதிபதிகள் வலுவாக இருந்து ஒருவரையொருவர் தொடர்புகொண்டு 1,5,9ம் பாவங்களையும் ஏதாவதொரு விதத்தில் தொடர்புகொண்டு திசை நடத்தினால் அது மிகவும் வலிமையான ஜாதகமாகும். அப்படியான ஜாதக அமைப்புடைய ஜாதகர் வாழ்வில் அனைத்து சுக போகங்களை அனுபவித்து சமுதாயத்தில் பேரும் புகழுடன் திகழ்வார். இதில் 1,5,9 அதிபதிகள் எந்த அளவிற்கு சூட்சும மற்றும் சுபத்துவ வலிமை பெற்று ஒருவரை ஒருவர் தொடர்புகொள்கிறார்கள் என்பதைப் பொருத்தே பலன்களும் இருக்கும். இதில் லக்கினாதிபதி லக்கினத்தில் இருப்பது அல்லது லக்கினத்தைப் பார்ப்பது சிறப்பாகும்.

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

பாவ புண்ணியம்

முற்பிறப்பில் நாம் செய்த கர்மவினைகள் சஞ்சீத கர்மாவாக நமது முன்னோர்கள் மற்றும் பெற்றோர் வழியாக இப்பிறப்பில் நமக்கு பிராப்த கர்மாவாக வரும். அதில் பாவம் மற்றும் புண்ணியம் என இரண்டுமே அடங்கும். அதில், நாம் என்ன விதமான பாவ / புண்ணியங்களை இப்பிறவியில் அனுபவிக்கிறோம் என்பதை நமது லக்கின பாவம் மூலம் அறியலாம். அதாவது, 12 லக்கினங்களும் சில குறிப்பிட பாவங்கள் வழியாக நவக்கிரகங்களின் மூலம் நம் பாவ / புண்ணிய கர்ம வினைகளைக் கடத்தும். உதரணமாக, கீழ்க்கண்ட லக்கினங்களுக்கு குறிப்பிடப்பட்டுள்ள பாவங்கள் வழியாகத்தான் பாவ / புண்ணிய கர்மாக்கள் நமக்கு வந்து சேரும். அதாவது, அந்த குறிப்பிட்ட பாவங்களே ராசியாகவோ அல்லது ஆட்சி / உச்ச / நீச கிரகங்கள் இருக்கும் பாவங்களாகவோ அல்லது அப்பாவாதிபதிகள் உச்ச / நீசமாகவோ அல்லது அப்பாவத்தில் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தோ அல்லது ராகு / கேதுக்கள் இருந்தோ இப்பிறப்பின் பிராப்த கர்மாவைச் செயல்படுத்தும். ஆக, இப்பிறப்பில் உங்கள் செயல்பாடுகள் அனைத்தும் அப்பாவங்களின் நன்மை / தீமைகளை சார்ந்தே செயல்படும் என்பது எமது ஜோதிட அனுபவத்தில் யாமறிந்த உண்மையாகும்.

மேஷம் / 2,4,5,7,8,10,11
ரிசபம் / 3,4,5,6,7,9,11,12
மிதுனம் / 4,6,7,10,11
கடகம் / 3,6,9,11,12
சிம்மம் / 1,3,4,9,10
கன்னி / 1,3,7,8,10,11,12
துலாம் / 2,3,6,7,8,11,12
விருச்சிகம் / 2,3,4,5,6,9,11
தணுசு / 2,4,6,7,8,9,11
மகரம் / 2,4,7,8,10,11
கும்பம் / 2,3,9,10,11,12
மீனம் / 1,4,5,7,10,11,12

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

பூரணத்துவம்

நிறைவு அல்லது முழுமை அல்லது பூரணம் என்பது புத்தியால்/அறிவால் படித்தறிந்து அல்லது பொருளறிந்து அறியக்கூடிய புறவிசயம் அன்று

இல்லையெனில் முழுயடைந்தவர்கள் அட்சரமாக எழுதி வைத்த பாடல்களை அறிவால் பொருளறிந்த அனைவரும் அல்லது யாரேனும் ஒருவராவது முழுமையடைந்திருக்க வேண்டும்

ஆனால் இதுவரை அப்படியேதும் நடக்கவில்லை, ஏனெனில் அவை முழுக்க முழுக்க அறிவு சார்ந்த விசயம் மட்டுமே

காரணம் ஒருவரின் உணர்வுநிலையை அறிவு நிலையாக்கி, அதை மற்றொருவரின் உணர்வு நிலையாக்குவது என்பது சாத்தியமே இல்லை. இதன்படியே ஞானிகளும் கருத்தில் வேறுபடுகிறார்கள்

ஏனெனில அறிவும் உணர்வும் எதிரெதிர் துருவங்கள்

எனவே அவர்வர் உணர்தல் அவருக்கு விசயம், தவிர முரண்பாடு என்பது கட்டமைப்புத் தன்மைகளின் (குணபேதம்) வேறுபாட்டால் உண்டாவதேயாகும்

எனவே, நாம் கண்டது, கேட்டது, படித்தது, விவாதித்தது, சுயமாக உணர்ந்தது ஆகிய அனைத்தின் புரிதல் எல்லாமே அறிவாக மட்டுமே வெளிப்படும், தவிர அது முழுமையாகாது

காரணம், எப்போதெல்லாம் ஒரு கருத்து வெளிப்படுகிறதோ அது அறிவேயாகும் ஏனெனில் அறிவு தன்னை வெளிப்படுத்திக் காட்டி நிருபணம் தேடும். ஆனால், ஞானத்திற்கு எவ்விதமான வேத விளக்க நிரூபணங்கள் தேவைப்படாது

அதாவது நான் நானாக இருக்கிறேன் என்பதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை

அதாவது நாம் என்னதான் வேத வியாக்கான விளக்கங்கள் கூறினாலும் அவையனைத்துமே அறிவு சார்ந்த விசயங்களேயன்றி பூரணமாகாது

இதில் விசயம் என்னவெனில் அவரவர் நிலைப்பாட்டிற்கு தத்தம் கருத்துக்கள் பிரதானமாக இருக்கும் ஆனால் இவை அனைத்துமே அவரவர் அனுபவ அறிவே தவிர அது பூரணமாகிய ஞானமாகாது

காரணம் ஞானம் என்பது தன்னை ஒருபோதும் வெளிப்படுத்திக் காட்டாது மேலும், அது மற்றவரின் அறிவு/உணர்வு நிலையோடு முட்டி நிருபிக்கவும் செய்யாது. 

ஆக அறிவே அகங்காரத்தைக் கொண்டெழுப்பி தன்னை வெளிப்படுத்துவதொடு மட்டுமின்றி நிருபணம் தேடி ஒன்றறொடொன்று முட்டி மோதும்

உதாரணமாக,

ஒரு செடி செடியாக இருக்கிறது அது மரகமாகவில்லை என்றும்; மரமானது பூக்கவில்லை என்றும்; பூத்திருக்கிறது ஆனால் காய்க்கவில்லை என்றும்; காய்த்திருக்கிறது ஆனால் கனியவில்லை என்றும்; கனிந்திருக்கிறது ஆனால் கனியை உதிர்க்கவில்லை என்றும் தன்னறிவால் விளக்கலாமே தவிர

செடி மரமாகவேண்டும் என்றும்; மரம் பூக்க வேண்டும் என்றும்; அது காய் காய்த்து கனிய வேண்டும் என்றும் நிர்பந்திக்க முடியாது

காரணம், நிகழ்வில் அது என்ன நிலையில் இருக்கிறதோ அதுவே அதற்கு "முழுமை அல்லது பூரணம்"

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

சிருஷ்ட்டி (1,5,9)

இறை அல்லது இருப்பு அல்லது தன்னிலையாகிய ஒருமை; ஐந்தாகிய பஞ்சபூதங்கள் மற்றும் ஒன்பதாகிய நவக்கிரகங்கள் ஆகிவற்றின் முழுமையே நாம் மற்றும் நம் இயக்கத்தின் மூலமாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

தன்னுணர்வு

நம் உடலில் ஆத்மாவானது நிலைபெற்று இருக்கும்வரை நம் உணர்வு நிலை என்பது மாறாதது. அதையே பிரக்ஞை என்று கூறுவார்கள். காரணம் ஆத்ம ஒளியானது உடலுடன் சேர்ந்தால்தான் அங்கு உணர்வே பிறக்கும், தவிர ஆத்மாவிற்கு தனிப்பட்ட உணர்வு நிலை என்பது கிடையாது.

அப்படியிருக்க இங்கு உடலும் ஆத்ம ஒளியைத் தொடர்புகொள்ளும் ஒரு கருவியாக இருந்து நமக்கு உணர்வு நிலை உண்டாக ஓர் காரியப்பொருளாய் இருக்கிறது. அப்படியான தன்னுணர்வு நிலைக்கு (விழிப்பு நிலை) தடையாய் இருப்பது நம் மனமேயாகும். 

அந்த மனம் என்பதே இருப்பின் (ஆத்மா) சலனமேயன்றி வேறில்லை. ஆனால் அதை அது அறியாமல் அது எங்கோ வெளியே இருப்பது போன்ற மாயைத் தோற்றத்தை ஐம்புலன்களினூடே உண்டுபண்ணி, காண்பதெல்லாம் நிஜம் எனக் கொள்கிறது. ஆக சலனமாகிய மனம் அது உருவான மூலத்தில் நிலைபெறும்போது நம் உணர்வுநிலையில் இருக்கிறோம் என்கிற விழிப்புநிலை உண்டாகிறது.

உதாரணமாக, சூரிய ஒளியை யாராலும் நேரடியாகக் கண்ணால் காண இயலாது, தவிர அது ஏதாவது ஒரு திடப்பொருளில் பட்டு பிரதிபலித்தால் மட்டுமே அதை நாம் ஒளி என்று உணர்கிறோம். அதுபோலவே, நம் ஆன்மா உடலுடன் சேர்ந்து உணர்வுகள் பிறக்கிறது. அது எவ்வாறு பலவிதமான உணர்வு நிலைகளாக மாறுகிறது என்பதை எம் அடுத்தடுத்த பதிவுகளில் காண்போமாக.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

சித்தம் (அரூபம்):

காரணமான ஆத்மாவிற்கும், காரியமான உடலுக்கும் நடுநிலைக் காரணியாய் இருக்கும் அந்தக்கரணமே "சித்தமாகும்". இதுவே #மனமானது நினைப்பதற்கும், #புத்தியானது நிச்சயிப்பதற்கும் மற்றும் #அகங்காரமானது கொண்டெழுப்புதற்கும் மூலகாரணமாய் இருக்கிறது. இவற்றின் முழுமையே தெளிந்த நீரோடையான அறிவேயாகும். இதில்தான் ஆத்மாவிலிருக்கும் ஜென்மாதி ஜென்ம கர்மப் பதிவுகளும், தலைமுறை தலைமுறைகளாய் ஸ்தூலத்தில் (உடல்) பதிந்திருக்கும் மரபணு விசயங்களும் ஒன்றாய் பரிணமித்திருக்கும் ஆழ்நிலைப் பதிவுகளாகும் (Sub-conscious memory).

உதாரணமாக:

1. ஆத்மா−Super conscious or Tertiary memory
2. சித்தம்−Subconscious or Secondary memory
3. மனம்−Conscious or Local or Primary memory

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

ஐவகை அக்கினிகள்

நம் உடலின் ஆத்மாவானது ஐந்து வகையான வெப்பத்தை (சூட்டை) தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அவை,

1.மோக அக்கினி −அடைய முற்படுவது
2. போக அக்கினி −பசி உணர்வு
3. காம அக்கினி −அடைந்து வெளிப்படுத்துவது
4. தாப க்கினி −அடைந்ததை மீண்டும் அடையத்துடிப்பது
5. ஞான அக்கினி −ஆனந்த நிலையில் லயித்திருப்பது

இவை சிவத்தின் ஐந்து தன்மைகளாகும்:

1. ந/மோகம் (மண்ணில் தீ) − #ருத்ர
2. ம/போகம் (நீரில் தீ) − #அர்த்தநாரீ
3. சி/காமம் (நெருப்பில் தீ) − #காலபைவ
4.வா/தாபம் (காற்றில் தீ) − #நடராஜ
5. ய/ஞானம் (ஆகாயத்தில் தீ) − #சதாசிவ

இவற்றின் முழுமையே ஆத்மவாவின் தன்மையாகும். இங்கு,

"மோகம்" என்பது ஒரு பொருளை அல்லது செயலையை நோக்கிய ஆசை, தூண்டுதல் அல்லது தீவிரம் எனக்கொள்ளலாம். 

"போகம்" என்பது தூண்டப்பட்ட விசயத்தை செயல்படுத்துவதாகும்.

"காமம்" என்பது அச்செயலால் உண்டான தன்மையை அடைந்துணர்ந்து வெளிப்படுத்துவது ஆகும். உதாரணமாக நாம் எச்சிலைக் காரி உமிழ்வதும், சுக்கிலத்தை வெளியேற்றுவதும், தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் அனைத்து வெளிப்பாடுளுமே காமமேயாகும்.

 "தாபம்" என்பது மேலே பெற்ற அனுபவங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் அடைய முற்படுவது.

"ஞானம்" என்பது அனைத்தின் பூரணமாகிய ஆனந்த நிலையில் லயித்திருப்பதாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

லக்கினம் (உயிர் ஸ்தானம்):

1. கிரேதாயுகத்தில் ஆணும்/பெண்ணும் புணரும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது

2. திரேதாயுகத்தில் கரு உண்டாகும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது

3. துவாபரயுகத்தில் சிசுவின் சிரசு ஜனனமாகும் காலம் லக்கினமாக எடுக்கப்பட்டது

4. கலியுகத்தில் ஜனித்த சிசுவின் முதல் சுவாசம் (அழுகை) லக்கினமாக எடுக்கப்படுகிறது

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

நிசப்தம் (அமைதி):

அமைதி என்கிற ஒன்று இவ்வுலகில் கிடையாது. அது நம் புலனுக்கு மட்டுமே விசயம், தவிர பரந்து விரிந்த இவ்வுலகம் அமைதியாய் இருப்பதாகத் தோன்றினாலும் அதை உற்று நோக்கினால் இரைச்சல்கள் இருப்பதை உணரலாம். ஏனெனில் அமைதி என்பதே இரைச்சலுடன் கூடிய சப்தமாகும். காரணம் இப்பிரபஞ்சம் என்பது ஓசை வடிவானது. அது சப்தத்தால் எங்கும் நிரப்பப்பட்டுள்ளது. எனவே அப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமான நமக்கும் இது பொருத்தும். இத்தன்மையை ஆழ்ந்த தியானத்தில் நன்றாகவே உணரலாம்.

உதாரணமாக, எக்காளம் என்கிற மீயொலியையும் ( >20,000dB), உயிரோசை என்கிற சிற்றொலியையும் ( <20dB) நம் செவியால் உணர இயலாது. அதாவது குறிப்பிட்ட ஒலி அளவீடுகளுக்குள் (20−20,000dB) இயங்கும் சப்தங்களை மட்டுமே நம் செவியால் உணர இயலும். அதனால் உணர இயலாத சப்தங்கள் நிசப்தமாத் தெரியுமே, தவிர அது நிசப்தமாகாது.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

குருவருளும் திருவருளும்

நாம் அனைவருமே இப்பிரபஞ்சத்தின் ஒரு அங்கமாக இருந்தாலும் நம் ஒவ்வொருவரின் புரிதல் மற்றும் உணர்தலின் கோணம் வேறுபடுகிறது. இதற்கு நம் உடலின் கட்டமைப்பு, உண்ணும் உணவு மற்றும் நாம் வாழும் இடத்தின் தன்மையே மூலகாரணங்களாகிறது. இங்கு புரிதல் என்பது மனம், புத்தி சார்ந்தும், உணர்தல் என்பது தன்னிலையின் ஆத்ம விசாரத்தைப் பொறுத்தும் இருக்கும்.

மேலும், எந்த ஒரு செயலையும் வெளிப்படுத்த அகங்காரம் என்பது அவசியம். அதாவது, வெளிப்படுத்துதல் எல்லாமே ஒருவிதமான அகங்காரமே. ஆனால், அது எதிர் நிலையில் இருப்பவரை பாதிக்காத வண்ணம், அதாவது அதை அவர்கள் ஏற்றுக்கொள்ளும் தன்மையில் இருப்பின் அவ்விசயம் அந்த நபரால் உள்வாங்கப்பட்டு அங்கு உணர்தல் மட்டுமே பிரதானமாயிருக்கும். தவிர, ஒத்துப்போகவில்லையெனில் விலக்கு விசை உண்டாகி அகங்காரம் மட்டுமே கொண்டெழுப்பபடும். அதானாலேயே ஞானிகள் தானுணர்ந்த விசயங்களை விவாதிக்காமல் குருவழி உபதேசமாகத் தந்தனர்.

அதாவது, ஒருவரின் கட்டமைப்புக்கு அப்பாற்பட்ட விசயங்களை எவ்வளவுதான் விளக்கிக்கூறினாலும் அதை யாராலும் புரிந்துகொள்ள இயலாது. காரணம் சொல்பவர் & கேட்பவர் இருவேறான தன்மையில் இருப்பின் விசயங்கள் ஒத்துப்போகாது. அதை உணர்த்தவே குரு என்பவர் முக்கிய பங்கு வகிக்கிறார். அவர் அரூபமாகவோ ஸ்வரூபமாகவோ இருந்து எதார்த்தத்தின் இயல்பை உணர்த்த காரணமாகிறார். இதுகூட அவரவர் பூர்வபுண்ணியக் கர்மாவைப் பொறுத்தே அமையும்.

அதாவது, யாரால் யாருக்கு எம்மாதிரியான உண்மையை உணர்த்த வேண்டுமென்பதும் கர்மாவின் தீர்மானமே. அப்படியாக அனைவருக்கும் ஏதோ ஒரு வழியில் அக மற்றும் புற குருமார்கள் அமைந்து விடுகின்றனர். சிலருக்கு தன் மனமே சற்குருவாய் இருந்து தம் சித்த கர்மாவை வழிகாட்டுகிறது.

ஆகமொத்தம் கால சலனத்தின் பிடியிலிருக்கும் நம் அனைவரும் எப்படி அதனை கையாண்டு, நம் தேவைக்கேற்ப வாழ்வாதார விசயங்களை நடைமுறைப்படுத்தி அதில் தன்னிறைவு பெறவேண்டும் என்பதை உணர்த்தவே ஞானிகளால் சாஸ்திரங்கள் வகுக்கப்பட்டிருக்கிறது. அவற்றின் மையக் கருத்தை நம் மனதில் உள்வாங்கி கொண்டு அதை நம் உணர்தல் மற்றும் புரிதல்கள்களுடன் மேலும் கிடத்திப்பார்க்க காலத்தால் நமக்கு சில விசயங்கள் அனுபவமாகின்றன.

மேலும், எந்த ஒரு காரியத்தின் காரணத்தை அறிய அதன் உண்மை அகம் நோக்கித் தேடவேண்டும். காரணம், நாம் காலத்தில் இருப்பதால்தான் இத்தனை கேள்விகளும் சந்தேகங்களும் நம்மில் பிறக்கின்றன. நாம் காலதீதனாக (காலமில்லா தன்மை) இருக்க கேள்வி பிறந்த இடத்திலேயே பதிலும்  கிடைத்துவிடும், அதுவே இயல்பு. எனில் காலத்தை விட்டு விலகி நிற்க அறிவால் விளங்கிங்கொள்ள முடியாத பல பிரபஞ்ச விசயங்கள் தன்னுணர்வால் உணரப்படும். இப்படியாகத்தான் ஞானிகள் தாங்கள் உணர்ந்த விசயங்களை அட்சரங்களாகத் தொகுத்து எழுதினர்.

ஏனெனில், ஞானம் சார்ந்த விசயங்கள் அனைத்தும் அறிவால் விளங்கிக் கொள்ளமுடியாத தத்துவார்த்தங்கள் ஆகும். அவற்றை அறிவாற்கொண்டு விளக்கமளிக்க இயலாது. ஆனால், அவற்றை குருவின் அருளால் உணரலாம் அல்லது அத்தமையில் வியாபித்து அதனை நம் அகத்தின்வழி உள்நோக்கிச் செலுத்த அவையனைத்திற்கும் நமக்குள் தெளிந்த பதில் கிடைக்கும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

நாமும் ஜோதிடமும்

ஜோதிடம் என்பது "சார்புடைமை" (relativity). அதாவது, அகத்திற்கும்/புறத்திற்கும் உள்ள தொடர்புதான் ஜோதிடம். இதில் நாம் என்பது தன்னிலை, 1ம் பாவம்; நமக்கு முன்னிலை என்பது 7ம் பாவம். அதாவது, 1 லிருந்து 7 வரை நம்மைச் சார்ந்த விசயங்கள், ஆனால் 7 லிருந்து 12 என்பது நாம் தொடர்புகொள்ளும் விசயங்கள். ஆக ஜோதிடத்தில் 12 பாவங்கள் என்பது அகத்திலும்−புறத்திலும் தொடர்புபட்டு, காலத்தால் #கர்மாக்களாய் பரிணமித்திருக்கிறது. அவை:−

1. சஞ்சிதம்−1,4,7,10 (Past and fixed)
2. பிரார்ப்தம்−2,5,8,11 (Present and practicing)
3. ஆகாமியம்−3,6,9,12 (Future and applicable)

ஜோதிடமானது ஐம்புலனினூடே (கண், காது, முக்கு, வாய், சருமம்) நம்மைத் தொடர்புகொண்டு நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரண/காரியமாய் இருக்கிறது. இங்கு கிரகங்களாகச் சொல்லப்படும் #ராகு/#கேது என்பவை "நேர்மின் மற்றும் எதிர்மின்" தன்மையுள்ள இருபடி−மூலங்கள். மேலும், #சூரியன்−#சந்திரன் என்பவை ஆத்மா−மனமாய், ராஜா−ராணியாய், சிவம்−சக்தியாய், இடகலை−பிங்கலையாய், புரோட்டான்−எலக்ட்ரானாய் உள்ளும்−புறமும் பிரதானமாக இருந்து, செயல்பட்டு, அதனுடன் கூடிய ஆதார சக்கரங்களாய் குரு, சனி, செவ்வாய், புதன், சுக்கிரனும் இயங்குகின்றன. இவை அனைத்துமே அகத்திலும்−புறத்திலும் இருந்து நமக்கும், நம் செயல்பாடுகளுக்கும் காரண/காரியகங்களாகச் செயல்படுகின்றன.

இன்னும் விளக்கமாகக் கூறவேண்டுமெனில், உடலில் சுவாசம் என்கிற உயிர்காற்று இருக்கும் வரை ஜோதிடம் என்கிற சார்புடைமை வேலை செய்யும்👍அதாவது, சுவாசம் இருந்தாலே அங்கு ஜோதிடம்தான் (நாடிகளில்−நவகிரகங்களின் நாட்டியம்)  பிரதானமாக வேலை செய்துகொண்டிருக்கிறது என்று அர்த்தம்🙏 

ஒருவன் இப்படித்தான் உதாரண புருஷனாய் இருக்க வேண்டும் என்பதற்கு அவனுடை 1,5,9 (லக்கினம்/பூர்வபுண்ணியம்/பாக்கியம்) பாவங்கள் வலுவாக இருக்க வேண்டும், இதற்கு உதாரணம் #ஶ்ரீராமர்; ஆனால் ஒருவன் எப்படி இருக்க கூடாதென்பதற்கு அவனுடைய 3,6,11 ஆகிய பாவங்களின் ஸ்திர தன்மையே காரணமாகும், இதற்கு உதாரணம் #ராவணன்.

இதைத்தான் "ஶ்ரீ கிருஷ்ணர் பகவத் கீதையில்" காமம்−குரோதம்−லோபம் (3,6,11) இருப்பவன் தன்னிலை (சத்தியத்தை)  மறந்து, அழிவை சந்திப்பான் எனக்கூறியுள்ளார்🙏

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

மகரம் (பொதுப்பலன்):

1. நீதிதேவனான சனிபகவானின் மகரத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் நீதி, நேர்மை, ஞாயம் மற்றும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டவர்கள்

2. காலபுருஷனுக்கு மகரம் கர்ம (ஜீவனம்) ஸ்தானமாக வருவதால் மகரத்தான் கடும் உழைப்பாளிகள், பிறரின் வளர்ச்சிக்கு தன்னை பலிகடாவாக்கிக் கொள்ளும் தன்மை கொண்டவர்கள்

3. பிரகஸ்பதி குரு நீசமாகும் மகரத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் வாழ்வின் ஒரு பகுதியில் ஏமாளிகளாகவும், பிறப்பிலேயே அதீத ஆன்மீக சிந்தனையை அடித்தளமாகவும் கொண்டிருப்பர்

4. செவ்வாய் உச்சமாகும் மகரம் அழுத்தம், பிடிவாதம் போன்ற குணங்களை தன்னகத்தே கொண்டிருந்தாலும், எடுத்த காரியத்தை பின்வாங்காமல் தீவிரமாகச் செய்து முடிக்கும் மனோவேகம் கொண்டது

5. சூரிய/சந்திரர்களின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் (அபிஜித்) கொண்ட மகரத்தான் சொல் மற்றும் செயலில் வசீகரமும், சாஸ்திர வித்தைகளில் சாதுர்யமும், எதிரிகளை எளிதில் வென்று சிம்ம சொப்பனமாய்த் திகழும் பேராற்றலையும் கொண்டவர்கள்

6. ஆரோகண/ஆதாரச்சக்கரத்தில் ஆக்னாவான மகரம் மெய்ஞானத்தின் அடிநாதமாக இருப்பதால் உலகப் புரிதல், இயற்கைப் புரிதல் மற்றும் சகலசம்பத்துகளில் ஞானப் பிளம்பாகும்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

கும்பம் (பொதுப்பலன்):

1. பூரிபூரண சாத்வீக ராசியான கும்பத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் தர்க்கம் மற்றும் விவாத விரும்பிகளாக இருப்பினும் நிதானம், பொறுமை மற்றும் தன்னடக்கம் ஆகிய சாத்வீக குணங்களுக்கு சொந்தக்காரர்கள் ஆவர்.

2. காலபுருஷனுக்கு கும்பம் லாபம் மற்றும் பாதகஸ்தானமாக வருவதால் பெரும்பாலும் கும்ப ராசி & லக்கினக்காரர்கள் வாழ்வில் ஏமாற்றம், தொழிலில் கடும் வீழ்ச்சி மற்றும் பல கசப்பான அனுபவங்களைக் கடந்து எதிர் நீச்சல் போட்டு, இறுதியில் சுயமுற்சியால் உச்சநிலைக்கு வருபவர்களாவர்

3. பன்னிரெண்டு ராசிகளிலேயே கும்பம் சனி பகவானுக்கு மிகவும் பிடித்த வீடு ஆதலால் இவர்களும் மகரத்தானைப் போன்றே நீதி, நேர்மை, ஞாயம் மற்றும் சத்தியத்துக்கு கட்டுப்பட்டு, சதா ஆன்மீக சிந்தனைகளைக் கொண்டிருப்பர்

4. பொதுவாக கும்ப ராசி மற்றும் லக்கினக்காரர்கள் எப்போதுமே தங்களை குறைத்தே மதிப்பிடுவர். ஆனால் அவர்களுக்குள் இருக்கும் அதீத ஆற்றல் சக்தியை அவர்கள் உணர்வதேயில்லை. அப்படியாக உணர்ந்தவர்களில் ஒருவர்தான் கும்பத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்ட அருள்மிகு #ஶ்ரீராமகிருஷ்ண_பரமஹம்சர் ஆவார்

5. அதிவீரியக் கிரகங்களான #செவ்வாய் மற்றும் #ராகுவின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் கொண்டுள்ளதால் கும்ப ராசி & லக்கினக்காரர்கள் கருநாகத்தின் குணமும், ஆஞ்சனேயரைப் போன்ற வேகமும், மனோ வலிமையும் கொண்டவர்கள். மேலும் இங்கு #குருவின் திரிஜென்ம நட்சத்திரமும் இருப்பதால் இவர்கள் சுவாபத்தில் சுபராவர்

6. அவரோகண/ஆதாரச் சக்கரத்தில் #ஆக்னாவான கும்பம் மெய்ஞானத்தின் உச்சமாக இருப்பதால் இவர்களுக்குள் பொதிந்திருக்கும் ஞானோதய விசயங்களோ ஏறாளம், எண்ணிலடங்கா. தவிர, #மெஸ்மரிசம் மற்றும் #வசியம் போன்ற தன்மைகள் இவர்களிடம் இயல்பாகவே குடிகொண்டிருக்கும். அதனாலேயே கும்பத்தை சிலர் மாந்தியின் ஆட்சி வீடென்பர்!

மல்லீஸ் குமார்
சென்னை

மீனம் (பொதுப்பலன்):

1. பிரகஸ்பதி குருவின் வீடான மீனத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் சுறுசுறுப்பு, சாஸ்திரத்தில் நாட்டம், சகிப்புத்தன்மை மற்றும் தன்னலமில்லாப் பண்புகளைக் கொண்ட கலியுகத்தின் தங்கமாகிய இவர்கள் "கோபம்" என்னும் ஆயுத்தைப் பிரையோகிக்க ஒருபோதும் விரும்பமாட்டர்

2. காலபுருஷனுக்கு 12ம் வீடாக மீனம் வருவதால் மீன ராசி மற்றும் லக்கினக்காரர்கள் அயன/சயன போகங்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதால், இவர்கள் ஆத்மீக ரீதியான விசயங்களில் மிகவும் தெளிவானவர்கள்

3. களத்திரக்காரன் சுக்கிரன் உச்சமாகும் மீன ராசி மற்றும் லக்கினக்காரர்கள் அதீத கற்பனைத் திறன், மிகுதியான நகைச்சுவையுணர்வு, அடுத்தவர்களை தம் செயல்பாட்டால் வசீகரிக்கும் தன்மை மற்றும் எளிதில் உணர்ச்சி வசப்படக்கூடிய குணத்தைக் கொண்டவர்கள் ஆவர்

4. வித்யாக்காரன் புதன் நீசமாகும் மீனத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் சில முக்கியமான முடிவுகளை எடுப்பதில் நிலை தடுமாறினாலும் அதை யாரிடம் கேட்டறிந்தால் தீர்வாகும் என்பதை நன்கு அறிந்தவர்களாவர். அது தவிர இவர்கள் மனரீதியாகப் பாதிக்கப்படின் அது அவர்களின் உடல்நிலை வரையிலான பாதிப்பை ஏற்படுத்திவிடும். அதாவது அந்த அளவிற்கு ஆழமாகச் சிந்திக்கும் திறன் கொண்டவர்களாவர்

5. சனி மற்றும் புதனின் திரிஜென்ம நட்சத்திரங்களைக் கொண்ட மீனத்தான் வயதுக்கு மீறிய விசயங்களை  சாமர்த்தியமாக செய்து முடிக்கும் தன்மை மற்றும் வாழ்வியல் பொருளாதார விசயங்களில் சிக்கனத்தின் சிகரங்களாவர்

6. அவரோகண/ஆதாரச்சக்கரத்தில் விசுக்தியான மீனம் வாழ்வில் எவ்விதமான துன்பங்கள் வரினும் அதை தமக்குள்ளே அடக்கி வைத்து, வெளிப்புறத்தில் எப்போதும் ஏகாந்த இன்பநிலையை வெளிப்படுத்தும் தன்மைகொண்டது!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

மேஷம் (பொதுப்பலன்):

1. அங்காரகனாகிய செவ்வாயின் மேஷத்தை ராசி அல்லது லக்கினமாகக் கொண்டவர்கள் தைரியம், முரட்டுத்தனம், வீர பராக்கிரம மற்றும் வைக்கிராக்கிய குணங்களைக் கொண்டிருப்பர்

2. காலபுருஷனின் லக்கின பாவமான மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் பிறப்பிலேயே ரோஷக்காரர்கள். தவிர, கடந்தகால நினைவுகளை தொடர்ச்சியாக நிந்திப்பதோடு, எந்நேரமும் விழிப்புடன் செயல்படும் தன்மை கொண்டவர்கள்

3. கர்மக்காரகன் சனி நீசமாகும் மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்களின் எண்ணமும், செயலும் பிறழாமல் ஒரே பாதையில் பயணிக்கும் கருமமே கண்ணாயினர். அதாவது, தான் நினைத்த காரியத்தை அதன்படியே செய்து முடிக்கும் ஆற்றல் கொண்டவர்கள்

4. ஆத்மக்காரகன் சூரியன் உச்சமாகும் மேஷத்தை ராசி மற்றும் லக்கினக்கினமாகக் கொண்டவர்கள் எவருக்கும் அடிபணியாத தன்மைப் பெற்றிருப்பதோடு, மற்றவர்களை தம் அதிகாரத்தால் அடக்கி ஆளும் ஆளுமைக்குணம் கொண்டவர்கள்

5. அஸ்வினி/பரணி/கார்த்திகை ஆகிய பெரும் நட்சத்திரங்களை தன்னகத்தே கொண்டுள்ள மேஷம் பிரபஞ்ச ரகசியத்தின் ஆதிமூலம் ஆகும். எனவேதான் மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் தன்னுள்ளே ரகசியங்களைக் கட்டிக்காப்பதில் வல்லவர்களாவர்

6. அவரோகண/ஆதாரச்சக்கரத்தில் அநாகதமான மேஷம் அன்பு, பாசம், இரக்கம் மற்றும் விசுவாசம் ஆகிய நற்குணங்களின் இருப்பிடகும். அதனால்தான் மேஷத்தை ராசி மற்றும் லக்கினமாகக் கொண்டவர்கள் அன்புக்கு மட்டுமே அடிமைகளாவர்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

ஆதாரசக்கரம் - எமது விளக்கம்

அஉம். சகஸ்ரரா − பரமேஸ்வரன்/பரமேஸ்வரி (ராகு)

அண்டம் (மகாரம்):
1(ய). ஆக்னா/ஆகாயம் − சதாசிவ(ம்)+மனோன்மணி (குரு)

கண்டம் (உகாரம்):
2(வா). விசுக்தி/வாயு − மகேஸ்வரன்+மகேஸ்வரி (சனி)

பிண்டம் (அகாரம்):
3(சி). அநாகதம்/நெருப்பு − ருத்ரன்+பார்வதி (செவ்வாய்)

4(ம). மணிப்பூரகம்/நீர்− பிரம்மா+சரஸ்வதி (புதன்)

5(ந). சுவாதிஸ்டானம்/மண்− விஷ்ணு+லட்சுமி (சுக்கிரன்)

6. மூலாதாரம் − சக்தி/விநாயகர் (கேது)

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சதாசிவ பிரம்மேந்திரம்

காரிய உடலில் மஹா காரணத்தை (ஆத்மா) தாங்கி "கர்மவினையில்" பயணிக்கும் நமக்கு 24 மணி நேரமும் தன்னுணர்வில் இருக்க வாய்ப்பில்லை. அதாவது லீலையில் இருந்து கொண்டு நித்தியமாய் மாறும் தன்மை என்பது மீண்டும் தாயின் கருவறைக்குள் பயணிக்கும் நிலைப்பாடு போலாகும். ஆனால் இயல்பிலோ அல்லது தியானத்திலோ அந்நிலை சில வினாடிகள் அல்லது நாழிகைகள் மட்டும் வாய்க்கப்பெற்று தன்னுணர்வின் ஏகாந்தத்தில் (பரமசுகம்) லயித்திருக்கலாம். அதுவே மனமில்லா/காலமில்லா "காலபைரவ" நிலையாகும். ஆனால், இந்நிலை தொடர்ந்து நீடித்து ஏதுமற்ற நிலைக்குள் பரிணமித்தால் அதுவே "சதாசிவபிரம்மேந்திரம்" ஆகும், தவிர மற்ற நேரங்களில் கிருஷ்ண பிரேமையான லீலையில்தான் லயித்திருப்போம். அதுவே "பிரம்மை" என்றும் "மாயை" என்றும் அழைக்கப்படும்!

கிருஷ்ண பிரேமையில் "பஞ்சபூதமாகிய" இருப்போடு "நவக்கிரகமாகிய" இயக்கம் சேர்ந்து, அதில் சூட்சுமமாகிய "மனமும்" லயித்து உலகம் உண்டாகும்.

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சைவ நாற்பாதங்கள் (முக்திக்கான வழிகள்):

ஆத்ம ஸ்வரூபமாய் இருந்து இப்புவியில் உடலெடுத்த மறுகணமே மனிதனின் கர்மவினை தொடங்கிவிடும். மனிதனாகப் பிறந்த அனைவருக்கும் அகங்காரம் என்பது சக்தியின் ஸ்வரூபமாய் அவரவரவர் தன்மையைப் பொறுத்து வெளிப்படும். அத்தகைய மாபெரும் சக்தியை தவத்தால்/யோகத்தால் அகத்தில் செலுத்தி சிவத்துடன் இணைத்தால் முக்தியாகும். ஆனால் பாமரனுக்கு இது சாத்தியமில்லை. ஆனால் மனிதன் முக்தி நிலையை அடைய நான்கு விதமான மார்க்கங்கள் உண்டு. அது சைவ நாற்பாதங்கள் என்றழைக்கப்படும்.

சைவ நாற்பாதங்கள் என்பது மனிதன் பிறவித் துன்பம் நீங்கி பிறவாமையாகிய பேரின்பத்தை வேண்டி, இறைவனின் திருவடியை அடைவதற்கு அனுசரிக்க வேண்டிய படிமுறைகளாகும். இதனை சைவ நன்னெறிகள், சிவ புண்ணியங்கள், நால்வகை நெறிகள் எனவும் கூறப்படுகிறது. அவை,

1. சரியை - பக்திமார்கம்
2. கிரியை - கர்மமார்க்கம்
3. யோகம் - சகமார்க்கம்
4. ஞானம் - சன்மார்க்கம்

1. சரியை (பக்திமார்கம்):

சரியை சைவ நாற்பாதங்களில் முதலாவது படியாகக் கூறப்படுவதாகும். அன்பின் துணையோடு உடம்பினால் செய்யும் இறைபணிகள் அனைத்தும் சரியை நெறியாகும். இலகுவாக செய்யக்கூடிய ஆரம்ப முயற்சியான இதற்குத் தூய தெய்வ பக்தியில் இறையம்சமும் துணை நிற்கவேண்டும்.

ஆலயங்களில் இறைவனை மனமுருகி வழிபடல், வழிபாட்டின் பொருட்டுத் திருக்கோயிலைக் கூட்டுதல், மெழுகுதல், கழுவுதல், திருவிளக்கு ஏற்றல், திருநந்தவனம் அமைத்தல், பூ எடுத்தல், பூமாலை தொடுத்தல், இறைவன் புகழ் பாடுதல், சிவனடியார்களைக் கண்டால் அவர்களை வணங்கி அவர்களுக்குச் சேவை செய்தல், உழவாரப்பணி செய்தல், பழங்கோயில்களை வேண்டும் அளவில் புதுப்பித்தல், புராணபடனம் செய்தல், கேட்டல், புராணக் கதை படித்தல், யாத்திரை செய்தல் ஆகியவையும் சரியையில் அடங்கும்.

சரியையின் நாற்படிகள்:

அ. சரியையிற் சரியை - சரியை நெறியில் திருக்கோயிலில் திருவிளக்கிடுதல் முதலான தொண்டுகள்.

ஆ. சரியையிற் கிரியை - ஒரே ஒரு மூர்த்தியை வழிபடல்.

இ. சரியையில் யோகம் - வழிபடும் கடவுளை தியானித்தல்.

ஈ. சரியையில் ஞானம் - சரியை வழிபாட்டால் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

(திருநாவுக்கரசர் சரியை நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).

2. கிரியை (கர்மமார்க்கம்):

கிரியை சைவ நாற்பாதங்களில் இரண்டாவது படியாகக் கூறப்படுவதாகும். மந்திர தந்திரங்களைக் குரு மூலமாக வேத சமய, விஷேட, நிர்வாண தீட்சைகளைப் பெற்று மேற்கொள்ளும் வழிபாட்டு முறை கிரியை நெறியாகும். தம்பொருட்டு தம்மளவில் செய்யும் ஆன்மார்த்த பூசையும், பிறர் பொருட்டு ஆலயங்களில் செய்யப்படும் பரார்த்த பூசையும் இந்நெறிக்குள் அடங்கும்.

திருமலர்கள், திருமஞ்சனம் முதலியவற்றால் ஒப்பனை, தூபம், தீபம், உபசாரங்களை ஏற்படுத்தல், வலம்செய்தல், பணிதல் தோத்திரம் என்பவற்றைச் செய்து வேண்டி நிற்றல் (பிரார்த்தனை) என்னும் இவ்வகைத் தொண்டே கிரியையாகும். செய்யும் செயலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தலும் கர்மமார்க்கமேயாகும்.

கிரியையின் நாற்படிகள்:

அ. கிரியையிற் சரியை - பூசைப் பொருட்களைத் திரட்டல்.

ஆ. கிரியையிற் கிரியை - புறத்தில் பூசித்தல்.

இ. கிரியையில் யோகம் - அகத்தில் பூசித்தல்.

ஈ. கிரியையில் ஞானம் - மேற்கூறிய கிரியைகளால் ஓர் அனுபவம் வாய்க்கப் பெறுதல்.

(திருஞானசம்பந்தர் கிரியை நெறியில் நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).

3. யோகம் (சகமார்க்கம்):

யோகம் சைவ நாற்பாதங்களில் மூன்றாவது படியாகக் கூறப்படுவதாகும். சரியை, கிரியை ஆகிய நெறிகளை விட மேலானதாக இந்நெறி சாத்திர நூல்களில் கூறப்படுகின்றது. இதற்கு இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம், பிரத்தியாகாரம், தாரணை, தியானம், சமாதி (வாசி) ஆகிய "அட்டாங்க யோகங்கள்" உள்ளன. இவ்வட்டாங்க யோகங்களிலும் பயிற்சி பெற்று படிப்படியாகத் தேறியவரே யோக நெறியை அனுசரிக்க முடியும். இதனை யோகியரிடம் பயின்ற திடசித்த முடையவர்களே அனுட்டித்து ஈடேற முடியும்.

யோகத்தின் நாற்படிகள்:

அ. யோகத்திற் சரியை - இயமம், நியமம், ஆசனம், பிராணாயாமம்.

ஆ. யோகத்திற் கிரியை - பிரத்தியாகாரம், தாரணை.

இ. யோகத்தில் யோகம் - தியானம்

ஈ. யோகத்தில் ஞானம் - சமாதி

(சுந்தரமூர்த்தி நாயனார் யோக நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்).

4. ஞானம் (சன்மார்க்கம்):

ஞானம் சைவ நாற்பாதங்களில் நாலாவது படியாகக் கூறப்படுவதாகும். ஞானமானது ஆன்மாவாகிய தன்னை சிவார்ப்பணம் செய்து "சதாசிவபிரம்மேந்திரமாக" இருத்தல் ஆகும். அதாவது சிவனை உருவம், அருவம், அருவுருவம் ஆகிய மூன்று திருமேனிகளையும் கடந்து சச்சிதானந்தப் பிழம்பாய் நீக்கமற எங்கும் நிறைந்திருக்கும் இறைவனை அறிவால் அறிந்து இறையின் அம்சமாகவே மாறுதல். கேட்டல், சிந்தித்தல், தெளிதல், நிட்டை கூடல் என்னும் நான்கு அங்கங்கள் இந்நெறிக்கு உண்டு. முந்தைய மூன்று நெறிகளிலும் நின்று பக்குவம் பெற்ற சாதகனை இறைவன் குரு வடிவிலே வந்து தீட்சை உபதேசம் செய்து ஞானத்தை அளித்து முத்தியை வழங்குவார்.

ஞானத்தின் நாற்படிகள்

அ. ஞானத்திற் சரியை - ஞான நூல்களைக் கேட்டல்.

ஆ. ஞானத்திற் கிரியை - ஞான நூல்களைச் சிந்தித்தல்.

இ. ஞானத்தில் யோகம் - ஞான நூல்களால் தெளிதல்.

ஈ. ஞானத்தில் ஞானம் - ஞான நிஷ்ட்டை கூடல்.

(மாணிக்கவாசகர் ஞான நெறி நின்றே இறைவனை வழிபாடு செய்தார்)

Edited by
C.S.மல்லீஸ் குமார்
சென்னை

குருவழி தியானமே சிறந்தது

ஒருவருடைய உடல் கட்டமைப்பு மற்றொருவரின் உடல் கட்டமைப்பிலிருந்து முற்றிலும் மாறுபடும். அதன் அடிப்படையில்தான் யோகாசன/தியானப் பயிற்சிகள் குருமார்களால் வழங்கப்படும். அதனால், யாராக இருந்தாலும் தியானம் பழகும் காலங்களில் அவரவர் குருநாதரின் கண்காணிப்பில் இருந்து பழகுவது மிக மிக அவசியம். தவிர, குருமுகமின்றி தாமாகவே யோகம் அல்லது தியானம் செய்ய முயன்றால் அதனால் வரும் உடல் உபாதகளை நீங்கள் அனுபவித்தே ஆகவேண்டும்.

உதாரணமாக:−

1. கண், நாசி, செவி, மர்ம உறுப்புகள் மற்றும் மலத்துவாரங்களில் இரத்தக் கசிவு ஏற்படலாம்

2. மூக்கடைப்பு ஏற்பட்டு மூச்சுத்திணறல் உண்டாகலாம்

3. பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி உண்டாகி மாதவிலக்கு பிரச்சனைகள் (over bleeding) வரலாம்

4. வாதம்/கபம்/பித்தம் ஆகிய மும்மலங்களின் தன்மையில் மாற்றம் ஏற்பட்டு உடல் உபாதைகள் வரலாம்

5. சூன்யாவிற்குள் மனம் சென்று திரும்பி வெளியேற இயலாமல் கோமா (சமாதி) நிலைக்குச் செல்ல நேரிடலாம்

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

பிரபஞ்ச தத்துவம்

ஒரு பொருள் எங்கிருந்து பிறந்ததோ அங்குதான் அது ஒடுங்கவும் செய்யும். அதாவது, சிவத்தில் சக்தி ஒடுங்குமே தவிர, சக்தியில் சிவம் ஒருபோதும் ஒடுங்காது.

காரணம், பிரளயத்தின்போது பராபரமாகிய பிரம்மத்தில் பரம் தோன்றி; பரத்தில் சிவம் தோன்றி; சிவத்தில் சக்தி தோன்றியது. அதுபோலவே, சக்தி சிவத்தில் ஒடுங்கி, சிவம் பரத்தில் ஒடுங்கி, பரம் பிரம்மத்தில் ஒடுங்கும். இதுவே சிவசக்தி, பரமசிவம் மற்றும் பரப்பிரம்மம் ஆகும். இத்தன்மையே அண்டத்திலும் (புறம்) பிண்டத்திலும் (அகம்) வியாபிக்கிறது.

எனவே, சிவத்திலிருந்து சக்தி தோன்றினால் அது #லீலை. ஆனால் சிவத்தில் சக்தியானது ஒடுங்கினால் அது #நித்தியம். இதை எப்படி பிறித்தரிவதெனில், நாம் பூமியானது லீலையாகிய மாயை ஆகும். இங்கு சூரியனானது (சிவம்) சந்திரனில் (சக்தி) ஒடுங்கி பௌர்ணமி போன்ற மாயைப் பிம்பம் உண்டாகுமே தவிர நிஜத்தில் சூரியனானது சந்திரனில் ஒடுங்கவே ஒடுங்காது. அதாவது மாயையாகிய பூமிக்கே இந்த இருபடி (அமாவாசை/பௌர்ணமி) பிம்பங்கள் பிரதானமாகும்.

இன்னும் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டுமெனில்,

#சிவம்/புரோட்டான்/இருப்பு
#சக்தி/எலெக்டரான்/இயக்கம்

எலெக்ரான் புரோட்டானை சுற்றுமே தவிர, புரோட்டான் எலெக்ட்ரானை ஒருபோதும் சுற்றாது. காரணம், புரோட்டான் நிலையானது.

எனவே, சிவமானது சக்தியில் ஒடுங்கினால் அச்சிருஷ்ட்டி அழிந்துவிடும். இதுபற்றி அறிவியலில் "பொருண்மை அழியா விதி" என ஒரு கோட்பாடுண்டு!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சரியை கிரியை யோகம் ஞானம்

1. பக்திமார்க்கம் தர்மத்தின் வழியில் சென்று சரணாகதி அடைவதற்கு

2. கர்மமார்க்கம் செய்யும் செயலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தவநிலையை அடைவதற்கு

3. யோகமார்க்கம் தவத்தால் காமத்தை கட்டுக்குள் வைத்து தன்னுள்ளிருக்கும் இறைதன்மையை உணர்வதற்கு

4. ஞானமார்க்கம் இறைநிலை உணர்வால் முக்தி (மோட்சம்) அடைவதற்கு

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

ஆன்மீக ஆலாபனைகள்

"ஆன்மீகம்" என்பது நபருக்கு நபர் வேறுபடும். அதாவது பக்தி, கர்மம், யோகம், ஞானம் என அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு ஆன்மீகப் புரிதல் இருக்கும். பெரும்பாலான ஆன்மீகவாதிகள் பக்தி மார்க்கத்தையே கடைபிடிக்கின்றனர். காரணம், அதுவே ஆன்மீகத்தின் அடிப்படையுமாகும். அதன் இறுதிநிலை என்பது சரணாகதியாகும்.

ஆன்மீகம்:

"நம் மூலத்தை நோக்கிய பயணமே ஆன்மீகமாகும்". காலத்திற்கு ஏற்றவாறு ஆன்மீகப் பயணத்தில் மேற்கூறிய படிகளுண்டு. ஆனால், அந்த மூலம் என்பது இறைவன், பிரம்மம், சிவன், ஆன்மா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், தவிர அதுவே முதன்மையாகும்.

கலியுகத்தில் ஆன்மீகம்:

கலியில் ஆன்மீகம் என்பது மாயையாகவே சித்தரிக்கப்படுகிறது. அதாவது அருவுருவற்ற இறைவனுக்கே உருவம் தரித்து வழிபடும் தன்மை பிரதானமாயிருக்கிறது. காரணம், மனமாகிய மாயைக்கு ஒரு கற்பனை உருவம் தேவைப்படுகிறது. அப்படியிருந்தால் மட்டுமே அது இறைவனை நிந்திக்கும். அதுவே மனத்தின் இயல்பும்கூட. இதுகூட நபருக்கு நபர் அவரவர் புரிதல் உணர்தலைப் பொருத்து வேறுபடும். அதாவது சிலர், இருக்கும் இடத்திலிருந்தே அகத்தில் இறைவனை உணர்ந்து ஏகாந்தத்தில் திளைப்பர், ஆனால் சிலருக்கு சிலையோ அல்லது படத்தையோ பார்த்தால்தான் பக்தி உருவெடுக்கும். இவையெல்லாம் முழுக்க முழக்க மனத்தின் மாயை சார்ந்த விசயங்களே!

முனிவர்கள்

அவரவர் இருக்கும் இறைநிலைத் தன்மையைப் பொறுத்து பெயர்கள் வேறுபடும் அதாவது கிரகஸ்தன், உபாசகர், யோகி, சாமியார், துறவி, சந்யாசி, தபசி, முனிவர் சித்தர், பித்தர், மஹரிஷி மற்றும் தேவர்கள் என வேறுபடும். ஆனால் அக்காலத்திலிருந்த ஆன்மீகவாதிகள் உடுத்தும் உடைகளுக்கும் வேஷங்களுக்கும் காரண/காரியமிருந்தது. அதாவது பிரபஞ்ச சக்தியை ஈர்க்க குடுமியும், தாடியும், தன்னில் இருக்கும் இறைசக்தி உச்சந்தலை (பத்தாவது வாசல்) வழியாக வெளியேறாமல் இருக்க உச்சிக்குடுமியும், விந்துவைக் கட்ட கோவணமும், மந்திர உச்சாடனைகளை எண்ண மணி மாலையும், பிரபஞ்ச சக்தியை தன்னுள் ஈரக்க நவக்கிரக மற்றும் ருத்ராக்ஷ கொட்டைகளும், உடலில் வியர்வை தங்காமலும், ஈரத்தை உறிஞ்ச விபூதி பட்டைகளும், உடலை குளுமையாக்க சந்தனமும் தரித்தனர். ஆனால், இவை அனைத்துமே சில குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டவை. காரணம் காடுகளிலும், மலைப் பாறைகளிலும், கடுங்குளிரிலும் இருப்பவர்களுக்கே இது விசயமாகும்.

நவீன சாமியார்கள்:

தாடியும் குடுமியும் வளர்த்து பட்டை போட்டு, கொட்டையிட்டு, காவியுடுத்தினால்தான் இறைநிலை வாய்க்குமா..? அப்படியிருந்தால்தான் ஆன்மீகத்தின் உச்சநிலையை தொட இயலுமா..? இல்லை, காரணம் அவையெல்லாம் மேற்சொன்ன அடிப்படை ஆன்மீக விசயங்களுடன் சேர்த்து, நான் இயமம், நியமம், பிரத்தியாகாரம், தாரணை, பக்தி, யோக, தியான மற்றும் சன்மார்க்க நெறிகளைக் கடைபிடித்து உணவு, உடை, இருப்பிடம் மற்றும் செயல்பாடுகள் என அனைத்து விதங்களிலும் உங்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாகவும், மந்திரம், பூஜை, ஹோமம் என்கிற வேத சம்பத்துக்களைக் கடைபிடித்து அனுஷரிப்பதால் எம்மைவிட்டு சற்று விலகி இருப்பாயாக, காரணம் என்னுடைய இறைசக்தி நிலை உங்களால் தடைபடக்கூடாது என்பதை உணர்த்தும் சமிக்கைகளே, தவிர அது மட்டுமே இறைநிலையாகாது. இன்னும் சரியாகக் கூறவேண்டுமெனில் "அரை நிர்வானக் கோவணமும், முழுநிர்வாணமுமே" ஆன்மீகத்தின் நிரந்தர ஆடையாகும்.

ஆன்மீக ஸ்வரூபிகள்:

மஹா அவதார் பாபா, ஆதிசங்கரர், புத்தர் மற்றும் அருட்பிரகாச வள்ளலார் போன்றோர் மேற்கூறிய சாயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உச்சகட்ட இறைநிலை அடைந்தவர்கள். காரணம், அவர்கள் ஞானத்தால் அகத்திலிருக்கும் இறைவனை (ஆன்மா) உணர்ந்து இறைவனாக மாறியவர்கள். இதற்கு எந்த விதமான விளக்கமோ, வியாக்கானமோ தேவைப்படாது. அதாவது, அகத்தை நோக்கிய பயணத்தில் ஒரு நிலையிலிருந்து அடுத்தநிலை வியாபிக்குமே, தவிர வேஷம் தரிப்பது என்பது எம்மிடமிருந்து விலகி இரு என்பதை அறிவறுத்தவே என்றுகூறி நிறைவு செய்கிறேன், நன்றி!

குறிப்பு: வேஷம் தரிக்ககூடாது என்பது பதிவின் நோக்கமல்ல, தவிர ஏன் மற்றும் எப்போது தரிக்கவேண்டும் என்பது பற்றி அறியாதவர்களுக்கு இது ஒரு பயனுள்ள பதிவாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

அகங்காரம்

இதன் பொருள் விளங்காமலேயே இதனை பயன்படுத்துவோர் ஏறாளம் மற்றும் எண்ணிலடங்கா. அகங்காரம் என்றால் என்ன..? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..?? அதென்ன அவ்வளவு பெரிய விசயமா..??? ஆமாம் அகங்காரம் மிகப்பெரிய விசயமே! காரணம், அகங்காரம் என்பது சக்தியின் வடிவம் (ஆங்காரி). நீங்கள் உங்கள் அகங்காரத்தை அடக்கி ஆள்கிறீர்கள் என்றால் உங்களில் இருக்கும் சக்தியை சிவத்தினுள் ஒடுங்கச் செய்கிறீர்கள் என்று பொருள்.

யாம் ஏற்கனவே எம்முடைய பதிவுகளில் கூறியுள்ளபடி எண்சான் உடம்பான இந்த ஸ்தூலம் மற்றும் சூட்சுமம் ஆகியவை சிவம் மற்றும் சக்தி ஆகிய இருபடி நிலைகளை தன்னகத்தே கொண்டு செயல்படுகிறது. ஏனெனில் இச்சிருஷ்டியில் இயக்கம் நடைபெற அவ்விருபடி நிலை மிக மிக அவசியம். ஒன்று ஆதாரமாகிய சிவம் (இருப்பு) மற்றொன்று ஆதரத்தைப் பற்றி இயங்கும் சக்தி (இயக்கம்). அதாவது ஸ்தூலமான பஞ்சபூதம் (நமசிவாய) சூட்சுமமாகிய நவசக்திகளுடன் (நவக்கிரகம்) தொடர்புகொள்ளும்போது அங்கு இயக்கம் நடைபெறும்.

இவ்விரண்டு தன்மைகளின் கலவைகளில் ஏற்படும் சிறு சிறு மாற்றமே நம்மில் ஏற்படும் பலவிதமான வேறுபாடுகளுக்கு காரணம். ஏனெனில் நாம் அனைவரும் வேறுபடுவது இந்த கலவைகளின் அடிப்படையில்தான். அதில் அவரவர் கட்டமைப்புக்கு ஏற்றவாறு இருப்பாகிய சிவமும், இயக்கமாகிய சக்தியின் தன்மையும் வேறுபடும். இத்தன்மைகளில் ஏற்படும் மாற்றமே நம்மில் வெளிப்படும் தேக/குணபேதங்களாகும். இதில் இயக்கமாகிய சக்தி இருப்பாகிய சிவத்தில் நின்று இயங்கும். இது தவிர காரணம் (மனம்) மஹாகாரணம் (ஆன்மா) எனவும் சூட்சுமத்தில் உள்ளது.

இத்தகைய சக்தியை ஒருவர் கட்டுக்குள் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அன்று. ஏனெனில், சக்தியானவள் கொண்டெழும்பி ஆடும் தன்மை கொண்டது. அதை அடக்கி ஆளவே இத்தனை யோகங்களும் தியானமுறைகளும் நடைமுறையில் உள்ளது. ஆம், யோக சாதனை செய்தவர்கள் அனைவருமே தன்னிலிருந்து வெளிப்படும் சக்தியை தனக்குள் இருக்கும் சிவத்துடன் ஒடுங்கச்செய்து எல்லாமாகிய பரபிரம்மத்தை உணர்ந்தார்கள். அதாவது, இருபடி நிலையிலிருந்து ஒருபடித்தன்மை நோக்கிய பயணமாகும்.

பொதுவாக அகங்காரம் இல்லாமல் மாயையாகிய இவ்வுலகம் இயங்காது. யாராக இருந்தாலும் ஒரு விசயத்தை வெளிப்படுத்த அகங்கரம் மிக அவசியம். ஆனால் அதன் அளவீடு மட்டும் வேறுபடும். உதாரணமாக ஒருவர் குரு தன்மையில் இருந்து உபதேசித்தாலும் தன்னை வெளிப்படுத்த அகங்காரம் அவசியம். அதாவது, அகங்காரம் இல்லாமல் எதையுமே வெளிப்படுத்த இயலாது.

எனில் இப்படிப்பட்ட சக்திமிகு அகங்காரத்தை அடக்கியாள்வது எவ்வாறு..? சாத்தியமா..? சாத்தியமே! காரணம், எங்கு அகங்காரமாகிய சக்தி இருக்கிறதோ அங்கே அதனை உள்வாங்கக்கூடிய இருப்பாகிய சிவமும் நிச்சயமிருக்கும். அப்படியெனில் சக்தியை சிவத்தினும் ஒடுங்கச் செய்வேண்டும். அது எவ்வாறெனில் ஞானிகளும் சித்த புருஷர்களும் பக்தி, கர்ம, யோக, ஞான மார்க்கங்கொண்டு சக்தியை சிவத்துடன் இணைத்து சித்தியடைந்தனர். இதில் மிகவும் எளிமையான ஆரம்பநிலை அடிப்படைமுறை என்பது பக்தி மார்க்கமாகிய சரணாகதியாகும்.

அதாவது இறை துதி பாடல், எந்தேரமும் இறைவனை போற்றி வணங்குதல், அடியார்க்கு சேவை செய்தல் என்பனவாகும். அது தவிர பொதுவாழ்வில் சிகையுதிர்த்தல், பிச்சையெடுத்தல், ஆடையைக் களைதல் (கோவணம், நிர்வாணம்) என்பதுதான் சரணாகதியின் முதற்படி. காரணம் ஒருவருடைய அகங்காரம் என்பது மேற்சொன்ன மூன்று செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கும். அதாவது சிகையலங்காரம், தன்மான உணர்வு மற்றும் ஆடை அலங்காரம் ஆகியவையே நம் வெளிப்புற அகங்காரத்தைப் பற்றி நிற்கும் தூண்களாகும். அதனால்தான் இன்னமும் குருகுல சன்யாசத்தில் மொட்டையடித்து பிச்சை எடுக்க வைப்பது பிரதான செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கிறது.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

காமமும் தட்சிணாயணகால விரதமுறைகளும்

பொதுவாழ்வில் ஆண் / பெண் உணர்வுகளானது குறிப்பிட்ட பருவ காலவங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சாஸ்திர விதிகளுடன் தொடர்புபடுத்தி விளக்க முயல்கிறேன். சாஸ்திரம் வகுத்த நம் முன்னோர்கள் எந்த ஒரு விதியைப் பற்றியும் நேரடியாகச் சொல்லவில்லை. காரணத்தை மறைத்து காரியத்தை மட்டும் செய்யச் சொல்லியிருப்பார்கள். இதை வழுவாமல் இப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் விதிமுறையாய் இருக்கும்.

அதுபோலவே நாம் வாழும் பூமியில் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பருவகால மாற்றத்தை நம் முன்னோர்கள்  கணக்கிட்டு, அது சார்ந்த வாழ்வாதார முறைகளை சாஸ்திரமாக வகுத்தனர். அதாவது ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள் என்பது சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 தமிழ் மாதங்களைக் குறிப்பனவையாகும். இதன் மொத்தம் 360 பாகைகளை உள்ளடக்கிய ஒரு வட்டமாகும்.

இது எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது எனில், சூரியன் ஒரு ராசியல் இருக்கும்போது அதன் எதிர் நிலையான ஏழாம் பாவத்தில் (180 பாகைகள்) சந்திரன் வரும் காலம் பௌர்ணமியாகும். அப்போது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் மீது சந்திரன் வரும்போது முழுமையாகப் பிரகாசிக்கும். 

தமிழ்மாதம் − பௌர்ணமி வரும் நட்சத்திரம்

1. சித்திரை − சித்திரை (சித்ரா பௌர்ணமி)
2. வைகாசி − விசாகம்
3. ஆணி − மூலம்
4. ஆடி − உத்திராடம்
5. ஆவணி − அவிட்டம்
6. புரட்டாசி − உத்திரட்டாதி
7. ஐப்பசி − அஸ்வினி
8. கார்த்திகை − கார்த்திகை (திருக்கார்த்திகை)
9. மார்கழி − திருவாதரை
10. தை − பூசம்
11. மாசி − மகம்
12. பங்குனி − உத்திரம்

மேற்கண்ட நட்சத்திரத்தன்று ஏற்படும் பௌர்ணமி காலத்தில் பூமியில் கிடைக்கும் சக்தியோ ஏறாளம். அத்தகைய அளப்பரிய சக்தியை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க அந்தந்த மாதங்களில் அக்குறிப்பட்ட நட்சத்திரங்களின் பெயரில் விரத முறைகளும், விழாக்களும் எடுக்கப்பட்டது.

இது தவிர மகர ராசியான தை மாதம் முதல், மிதுன ராசியான ஆணி மாதம் வரை "உத்திராயணம்" எனவும், கடக ரிசியான ஆடி மாதம் முதல் தணுசு ரிசியான மார்கழி வரை "தட்சிணாயணம்" எனவும் குறிப்பட்டார்கள். காரணம் உத்திராயண காலத்தில் சூரியன் "வடக்கு" நோக்கியும், தட்சிணாயண காலத்தில் "தெற்கு நோக்கியும்" பயணிக்கும். இதில் விசேஷம் என்னவெனில் சூரியன், தை மாதத்திலிருந்து ஆணி நோக்கி பயணிக்கும் உத்ராயண காலம் "உஷ்ணம்" மிகுந்தும், ஆடியிலிருந்து மார்கழிவரை பயணிக்கும் தட்சிணாண காலம் "குளிர்ச்சி" மிகுந்து காணப்படும். ஏனெனில், உஷ்ண காலங்களில் சூரியன் பூமிக்கு அருகிலும், குளிர்ச்சியான காலங்களில் சூரியன் பூமியைவிட்டு விலகியும் இருக்கும்.

இங்குதான் பதிவின் காமப் பகுதியே ஆரம்பகிறது. இதற்கும் உடலில் உண்டாகும் காம எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என ஐயம் வரலாம். நம் ஆத்மாவானது ஐவகை அக்கினிகளைக் கொண்டெழுப்பும் தன்மை கொண்டது. அந்த ஐவகை அக்கினிகளே நம் உடலின் வெப்பத்தைச் சீராக்கி சமநிலையில் வைக்கிறது. அவை,

ஐவகை அக்கினிகள்:

1. போகாக்கினி (பசியுணர்வு)
2. மோகாக்கினி (மோக உணர்வு)
3. காமாக்கினி (காம உணர்வு)
4. தாபாக்கினி (ஆசையுணர்வு)
5. ஞானாக்கினி (ஞானம்)

ஆன்மாவின் இந்த வெப்பச் சமநிலைக்கும், பூமியில் சூரியனின் பருவகால மாற்றத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என்றால், உத்ராயணமான உஷ்ண காலத்தில் நம் உடலின் வெப்பநிலையானது குறைந்தும், தட்சாயிணாயிணமான குளிர்காலத்தில் உடலில் வெப்பநிலையானது அதிகரித்தும் காணப்படும். அதாவது நம் ஆத்மாவானது புறத்தில் வெப்பம் மிகுதியாக இருக்கும்போது அகத்தில் வெப்பத்தைக் குறைத்தும், புறத்தில் வெப்பம் குறைந்து இருக்கும்போது அகத்தில் வெப்பத்தை அதிகரித்தும் உடலின் வெப்பச் சமநிலையை சீராக்கும்.

விசயம் யாதெனில், எப்போது உடலின்   வெப்பநிலை ஆத்மாவால் கொண்டெழுப்படுகிறதோ அப்போதெல்லாம் உடலின் காம இச்சை அதிகரிக்கும். குறிப்பாக சூரியன் பூமியைவிட்டு 151 பாகை முதல் 270 பாகை வரையிலான தட்சிணாயின காலம் என்பது புரட்டாசி முதல் மார்கழி வரையிலான "குளிர்காலமாகும்". இந்த மாதங்களில் புவியில் ஜனிக்கும் உயிரினங்களுக்கு இப்பெருக்க காலமாகும். அதாவது அந்தக் காலங்களில் அதிகப்படியான காம இச்சைகள் ஆத்மாவால் கொண்டெழுப்பப்படும்.

குறிப்பிட்டுள்ள நட்சத்திர காலங்களில் ஏற்படும் பௌர்ணமி ஒளியால் பூமியில் அளப்பரிய சக்தி உண்டாக்கும் என மேலே குறிப்பிட்டிருக்கிறேன். அச்சக்தியானது நம் உடலின் வெப்ப சக்தியோடு சேரும்போது உடலானது புத்துணர்ச்சியால் கிளர்ச்சியடைந்து வரைமுறையற்ற காமத்தை வெளிப்படுத்தும். அதானாலேயே, புரட்டாசி முதல் மார்கழி வரையிலான குளிர்காலத்தில் அதிகப்படியான விரத முறைகளும், விழாக்களும் இறைவனின் பெயரில் அனுசரிக்கப்படுகிறது. அதாவது #புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம் மற்றும் நவராத்திரி / விஜயதசமி நோன்பு, #ஐப்பசியில் தீபாவளிப்பண்டிகை, #கார்த்திகையில் முருகனுக்கு திருக்கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலையணியதலும், #மார்கழியில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை நோன்பும் இறைவனின் பெயரில் அனுசரிக்கப்பட்டு காம உணர்வுகள் கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதுவே நம் முன்னோர்கள் வகுத்த அதிவிஞ்ஞான சாஸ்திரமாகும்.

மேலும் புரட்டாசியானது / ஆண்களுக்கும் மார்கழியானது / பெண்களுக்கும் உரித்தான காலமாகும். அதாவது புரட்டாசியில் ஆணின் உணர்வுகள் வக்கிரமாகவும், மார்கழியில் பெண்ணின் உணர்வுகள் வக்கிரமாகவும், ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் இருவரின் உணர்வுகள் சமநிலையிலும் இருக்கும். அதனாலேயே புரட்டாசி மாதம் ஆண்களின் விரத காலமாகவும்,  மார்கழிமாதம் பெண்களுக்கு திருப்பாவை நோன்பு காலமாகவும் பிரிக்கப்பட்டது. இவ்விரண்டு மாதங்களிலும் களத்திரக் (திருமண) காரகரான பெருமாளே பிரதானக் கடவுளாகும், நன்றி!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

கர்மாவை ஏன் மாற்றியமைக்க இயலாது..?

ஒரு விதையில் உள்ள வித்தின் கட்டமைப்பானது தீர்மானிக்கப்பட்ட குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது காலங்காலமாக அதன் முன்னோர்களால் கடத்தப்பட்ட குணங்கள் அனைத்தும் அவ்வித்தில் பூரணமாய் பரணமித்திருக்கும். மேலும், அது காலத்தால் விரிந்து வித்தில் உள்ள குணபேதத்தை காலத்தால் வெளிப்படுத்துமே, தவிர வித்தின் கட்டமைப்பைத் தாண்டிய தன்மைகள் ஒருபோதும் வெளிப்படாது.

அதுபோலவே, ஒரு மனிதக் கருவின் கர்மக்கட்டமைப்பும் அது கருவுற்றபோதே அதன் குணமானது தீர்மானிக்கப்பட்டு, காலத்தால் குணபேங்களாக விரிந்து வெளிப்படுமே, தவிர கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட தன்மைகள் ஒருபோதும் வெளிப்படாது. இதுவே சிருஷ்ட்டி தத்துவமாகும்.

இதில் விசயம் என்னவெனில் ஒருமுறை கட்டமைக்கப்பட்டுவிட்டால் அதை யாராலும் மாற்றியமைக்க இயலாது. மீறி மாற்றியமைக்க முற்பட்டால் அது அழிந்துவிடும். அந்தக் கட்டமைப்புதான் "கர்மா" ஆகும். அதன் விளைவே கர்மவினையாகும். இதில் உடலானது கர்மவினையை தாங்கும் காரியப் பொருளாகவும், உயிர்/ஆன்மா அவ்வுடல் இயங்குவதற்கு காரணப் பொருளாகவும் மற்றும் மனம் அதனை இயக்கும் காரணியாகவும் இருந்து செயல்படும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

எட்டில் சனி பகவான்

ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திரனுக்கு 8ல் சனி இருப்பவர்கள் தினம் தினம் போராடி ஜெயிக்க வேண்டும். வாழ்வில் பலவிதமான சோதனைகளைக் கடந்து எதிர் நீச்சல் போட வேண்டும். அதிலும் சனி திசை அல்லது ஏழரைச்சனி அல்லது அஷ்ம சனி தொடர்புண்டானால் தீராத நோய், தொடர் மனக்கவலைகள், விரக்தி, காரணமில்லா பயம், தற்கொலை எண்ணம் போன்றவை தலை தூக்கும்!

பரிகாரம்:

1. நெல்லிக்காய் சாறு குடித்தல், பூமிக்கு கீழ் விளையும் உணவுப் பொருட்களை உண்ணுதல்

2. ஶ்ரீரங்கம், திருப்பதி போன்ற பெருமாள் ஸ்தலங்கள், ஐயப்பன் கோவில் வழிபாடு மற்றும் முருகனின் அறுபடை வீடுகள் வழிபாடு, அதில் குறிப்பாக திருச்செந்தூர் முருகன் சன்னதி வழிபாடு நன்மை தரும்.

3. காலபைரவ மற்றும் துர்க்கை வழிபாடு

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

நவக்கிரக ஸ்தலங்களும்; மறைக்கப்பட்ட உண்மைகளும்

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து நவக்கிரகக் கோவில்களிலும் மூலவர் சிவனாகவும், கிரக சிலையை தனியாகவும் வைத்திருப்பர். உண்மையில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் கிரகமானது உற்சவரே, தவிர அக்கோவிலில் பிரதானமாக இருக்கும் மூலவரிடத்து அக்கிரக சக்திகள் (மந்திர/யந்திர) தீர்மானிக்கப்பட்டிருக்கும். அங்குதான் அக்கிரத்தின் சக்தியோட்டம் அபரிவிதமாக வெளிப்படும்.

அதாவது, எந்த ஒரு நவக்கிர சக்தியும் தனித்து இயங்காது. காரணம், அவற்றின் இயக்க பரிணாமத்திற்கு பஞ்சபூதத் தன்மைகள் அல்லது தத்துவங்களின் சேர்க்கை மிகமிக அவசியம். நான் ஏற்கனவே எம் பதிவுகளில் குறிப்பிட்டிருந்த தன்மை மற்றும் தத்துவங்களைக் கீழே காணலாம்:−

தத்துவங்கள்/தன்மைகள்

ந−மண்/ருத்ரன்
ம−நீ்ர்/அர்த்தநாரீ
சி−நெருப்பு/காலபைரவ
வா−காற்று/நடராஜ
ய−ஆகாயம்/சதாசிவ

ஆக மேற்கூறிய தன்மை/தத்துவங்களுக்கு ஏற்றார்போல நவக்கிரக சக்திகள் மந்திர/யந்திரமாகவோ அல்லது அவ்விடத்தில் இயற்கையாக விரவிக்கிடக்கும் நவக்கிர சக்தியை ஒருமித்தோ அவற்றை பஞ்சபூதத்துடன் சேர்த்து தீர்மானித்து, அக்கலவையை நம் ஸ்தூல உட்கிரகித்தலுக்கு காரியமாகிக்கியுள்ளனர், தவிர எந்த ஒரு நவக்கிரகமும் பஞ்சபூத அம்சமில்லாமல் தனித்து இயங்காது. இங்கு, பஞ்சபூதம்−காரணம்; நவக்கிரகம்−காரியம்.

நவக்கிரக_ஸ்தலங்கள்

1. ஆடுதுறை / சிவசூரியனார் + சூரியன்
2. திங்களூர் / கைலாசநாதர் + சந்திரன்
3. சீர்காழி / வைத்தீஸ்வரர் + செவ்வாய்
4. திருவெண்காடு / சுவேதாரண்யேஸ்வரர் + புதன்
5. ஆலங்குடி / ஆபத்சகாயேஸ்வரர் + குரு
6. கஞ்சனூர் / அக்னீஸ்வரர் + சுக்கிரன்
7. திருநள்ளாறு / தர்பாரண்யேஸ்வரர் + சனி
8. திருநாகேஷ்வரம் / நாகநாதர் + ராகு
9. கீழ்ப்பெரும்பள்ளம் / நாகநாதர் + கேது

ஆக, உற்சவ கிரகத்தை தரிசிப்பதற்காக வரிசைகளில் நின்று கஷ்டப்படுவதை விடுத்து, பஞ்சபூத/நவக்கிரக சக்திகள் பிரதானமாக தீர்மானிக்கப்பட்டிருக்கும் மூலவரை தரிஷித்து அனுக்கிரகம் பெறுங்கள்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை