Showing posts with label சித்தாந்தம். Show all posts
Showing posts with label சித்தாந்தம். Show all posts

Monday, 28 September 2020

மந்திரவுடல்

இப்பிரபஞ்சம் முழுவதும் ஒளியாலும், ஓசையாலும் நிரப்பப்பட்டுள்ளது. இப்பிரபஞ்சத்தின் அங்கமான நமது உடலும் மூல மந்திரமான ஓம்கார நாதத்தால் கட்டப்பட்டுள்ளது. அதுவே இப்பிரபஞ்ச பேராற்றலின் உயிர்நாடியுமாகும். இருப்பினும், இம்முலத்திலிருந்து விரிந்த கிளை மந்திரங்கள் ஏராளம். அதாவது, நமது உடலின் ஒவ்வொரு அங்கமும் ஒவ்வொரு விதமான பீஜத்தை தொடர்ந்து எழுப்பிக்கொண்டே இருக்கும். அதையே நாம் உடலின் நாடிகள் எனவும் கூறுகிறோம். அப்படியாக நமது உடலில் இருந்து வெளிப்படும் ஒட்டுமொத்த மந்திரங்களின் எண்ணிக்கை 72,000. அதில் பிரதானம் 108, இவை அனைத்தும் இயங்க காரணமாய் இருக்கும் மூலம் ஒன்றாகும். இப்படியாக பஞ்ச பூதங்களுடன் / ஒலி வடிவம் இணையப்பெற்று இயங்குவதாலேயே வேத சாஸ்திரம் என்பது மந்திர வடிவங்களாய் இருக்கிறது. அவை நம் உடலுக்கு விசயம். உடல் உயிருக்கு விசயம்!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

பூரணத்துவம்

நிறைவு அல்லது முழுமை அல்லது பூரணம் என்பது புத்தியால்/அறிவால் படித்தறிந்து அல்லது பொருளறிந்து அறியக்கூடிய புறவிசயம் அன்று

இல்லையெனில் முழுயடைந்தவர்கள் அட்சரமாக எழுதி வைத்த பாடல்களை அறிவால் பொருளறிந்த அனைவரும் அல்லது யாரேனும் ஒருவராவது முழுமையடைந்திருக்க வேண்டும்

ஆனால் இதுவரை அப்படியேதும் நடக்கவில்லை, ஏனெனில் அவை முழுக்க முழுக்க அறிவு சார்ந்த விசயம் மட்டுமே

காரணம் ஒருவரின் உணர்வுநிலையை அறிவு நிலையாக்கி, அதை மற்றொருவரின் உணர்வு நிலையாக்குவது என்பது சாத்தியமே இல்லை. இதன்படியே ஞானிகளும் கருத்தில் வேறுபடுகிறார்கள்

ஏனெனில அறிவும் உணர்வும் எதிரெதிர் துருவங்கள்

எனவே அவர்வர் உணர்தல் அவருக்கு விசயம், தவிர முரண்பாடு என்பது கட்டமைப்புத் தன்மைகளின் (குணபேதம்) வேறுபாட்டால் உண்டாவதேயாகும்

எனவே, நாம் கண்டது, கேட்டது, படித்தது, விவாதித்தது, சுயமாக உணர்ந்தது ஆகிய அனைத்தின் புரிதல் எல்லாமே அறிவாக மட்டுமே வெளிப்படும், தவிர அது முழுமையாகாது

காரணம், எப்போதெல்லாம் ஒரு கருத்து வெளிப்படுகிறதோ அது அறிவேயாகும் ஏனெனில் அறிவு தன்னை வெளிப்படுத்திக் காட்டி நிருபணம் தேடும். ஆனால், ஞானத்திற்கு எவ்விதமான வேத விளக்க நிரூபணங்கள் தேவைப்படாது

அதாவது நான் நானாக இருக்கிறேன் என்பதற்கு எந்த விளக்கமும் தேவையில்லை

அதாவது நாம் என்னதான் வேத வியாக்கான விளக்கங்கள் கூறினாலும் அவையனைத்துமே அறிவு சார்ந்த விசயங்களேயன்றி பூரணமாகாது

இதில் விசயம் என்னவெனில் அவரவர் நிலைப்பாட்டிற்கு தத்தம் கருத்துக்கள் பிரதானமாக இருக்கும் ஆனால் இவை அனைத்துமே அவரவர் அனுபவ அறிவே தவிர அது பூரணமாகிய ஞானமாகாது

காரணம் ஞானம் என்பது தன்னை ஒருபோதும் வெளிப்படுத்திக் காட்டாது மேலும், அது மற்றவரின் அறிவு/உணர்வு நிலையோடு முட்டி நிருபிக்கவும் செய்யாது. 

ஆக அறிவே அகங்காரத்தைக் கொண்டெழுப்பி தன்னை வெளிப்படுத்துவதொடு மட்டுமின்றி நிருபணம் தேடி ஒன்றறொடொன்று முட்டி மோதும்

உதாரணமாக,

ஒரு செடி செடியாக இருக்கிறது அது மரகமாகவில்லை என்றும்; மரமானது பூக்கவில்லை என்றும்; பூத்திருக்கிறது ஆனால் காய்க்கவில்லை என்றும்; காய்த்திருக்கிறது ஆனால் கனியவில்லை என்றும்; கனிந்திருக்கிறது ஆனால் கனியை உதிர்க்கவில்லை என்றும் தன்னறிவால் விளக்கலாமே தவிர

செடி மரமாகவேண்டும் என்றும்; மரம் பூக்க வேண்டும் என்றும்; அது காய் காய்த்து கனிய வேண்டும் என்றும் நிர்பந்திக்க முடியாது

காரணம், நிகழ்வில் அது என்ன நிலையில் இருக்கிறதோ அதுவே அதற்கு "முழுமை அல்லது பூரணம்"

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

தன்னுணர்வு

நம் உடலில் ஆத்மாவானது நிலைபெற்று இருக்கும்வரை நம் உணர்வு நிலை என்பது மாறாதது. அதையே பிரக்ஞை என்று கூறுவார்கள். காரணம் ஆத்ம ஒளியானது உடலுடன் சேர்ந்தால்தான் அங்கு உணர்வே பிறக்கும், தவிர ஆத்மாவிற்கு தனிப்பட்ட உணர்வு நிலை என்பது கிடையாது.

அப்படியிருக்க இங்கு உடலும் ஆத்ம ஒளியைத் தொடர்புகொள்ளும் ஒரு கருவியாக இருந்து நமக்கு உணர்வு நிலை உண்டாக ஓர் காரியப்பொருளாய் இருக்கிறது. அப்படியான தன்னுணர்வு நிலைக்கு (விழிப்பு நிலை) தடையாய் இருப்பது நம் மனமேயாகும். 

அந்த மனம் என்பதே இருப்பின் (ஆத்மா) சலனமேயன்றி வேறில்லை. ஆனால் அதை அது அறியாமல் அது எங்கோ வெளியே இருப்பது போன்ற மாயைத் தோற்றத்தை ஐம்புலன்களினூடே உண்டுபண்ணி, காண்பதெல்லாம் நிஜம் எனக் கொள்கிறது. ஆக சலனமாகிய மனம் அது உருவான மூலத்தில் நிலைபெறும்போது நம் உணர்வுநிலையில் இருக்கிறோம் என்கிற விழிப்புநிலை உண்டாகிறது.

உதாரணமாக, சூரிய ஒளியை யாராலும் நேரடியாகக் கண்ணால் காண இயலாது, தவிர அது ஏதாவது ஒரு திடப்பொருளில் பட்டு பிரதிபலித்தால் மட்டுமே அதை நாம் ஒளி என்று உணர்கிறோம். அதுபோலவே, நம் ஆன்மா உடலுடன் சேர்ந்து உணர்வுகள் பிறக்கிறது. அது எவ்வாறு பலவிதமான உணர்வு நிலைகளாக மாறுகிறது என்பதை எம் அடுத்தடுத்த பதிவுகளில் காண்போமாக.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

சித்தம் (அரூபம்):

காரணமான ஆத்மாவிற்கும், காரியமான உடலுக்கும் நடுநிலைக் காரணியாய் இருக்கும் அந்தக்கரணமே "சித்தமாகும்". இதுவே #மனமானது நினைப்பதற்கும், #புத்தியானது நிச்சயிப்பதற்கும் மற்றும் #அகங்காரமானது கொண்டெழுப்புதற்கும் மூலகாரணமாய் இருக்கிறது. இவற்றின் முழுமையே தெளிந்த நீரோடையான அறிவேயாகும். இதில்தான் ஆத்மாவிலிருக்கும் ஜென்மாதி ஜென்ம கர்மப் பதிவுகளும், தலைமுறை தலைமுறைகளாய் ஸ்தூலத்தில் (உடல்) பதிந்திருக்கும் மரபணு விசயங்களும் ஒன்றாய் பரிணமித்திருக்கும் ஆழ்நிலைப் பதிவுகளாகும் (Sub-conscious memory).

உதாரணமாக:

1. ஆத்மா−Super conscious or Tertiary memory
2. சித்தம்−Subconscious or Secondary memory
3. மனம்−Conscious or Local or Primary memory

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

ஐவகை அக்கினிகள்

நம் உடலின் ஆத்மாவானது ஐந்து வகையான வெப்பத்தை (சூட்டை) தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டே இருக்கும். அவை,

1.மோக அக்கினி −அடைய முற்படுவது
2. போக அக்கினி −பசி உணர்வு
3. காம அக்கினி −அடைந்து வெளிப்படுத்துவது
4. தாப க்கினி −அடைந்ததை மீண்டும் அடையத்துடிப்பது
5. ஞான அக்கினி −ஆனந்த நிலையில் லயித்திருப்பது

இவை சிவத்தின் ஐந்து தன்மைகளாகும்:

1. ந/மோகம் (மண்ணில் தீ) − #ருத்ர
2. ம/போகம் (நீரில் தீ) − #அர்த்தநாரீ
3. சி/காமம் (நெருப்பில் தீ) − #காலபைவ
4.வா/தாபம் (காற்றில் தீ) − #நடராஜ
5. ய/ஞானம் (ஆகாயத்தில் தீ) − #சதாசிவ

இவற்றின் முழுமையே ஆத்மவாவின் தன்மையாகும். இங்கு,

"மோகம்" என்பது ஒரு பொருளை அல்லது செயலையை நோக்கிய ஆசை, தூண்டுதல் அல்லது தீவிரம் எனக்கொள்ளலாம். 

"போகம்" என்பது தூண்டப்பட்ட விசயத்தை செயல்படுத்துவதாகும்.

"காமம்" என்பது அச்செயலால் உண்டான தன்மையை அடைந்துணர்ந்து வெளிப்படுத்துவது ஆகும். உதாரணமாக நாம் எச்சிலைக் காரி உமிழ்வதும், சுக்கிலத்தை வெளியேற்றுவதும், தாய் தன் குழந்தைக்கு பாலூட்டும் அனைத்து வெளிப்பாடுளுமே காமமேயாகும்.

 "தாபம்" என்பது மேலே பெற்ற அனுபவங்கள் அனைத்தும் மீண்டும் மீண்டும் அடைய முற்படுவது.

"ஞானம்" என்பது அனைத்தின் பூரணமாகிய ஆனந்த நிலையில் லயித்திருப்பதாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

பிரபஞ்ச தத்துவம்

ஒரு பொருள் எங்கிருந்து பிறந்ததோ அங்குதான் அது ஒடுங்கவும் செய்யும். அதாவது, சிவத்தில் சக்தி ஒடுங்குமே தவிர, சக்தியில் சிவம் ஒருபோதும் ஒடுங்காது.

காரணம், பிரளயத்தின்போது பராபரமாகிய பிரம்மத்தில் பரம் தோன்றி; பரத்தில் சிவம் தோன்றி; சிவத்தில் சக்தி தோன்றியது. அதுபோலவே, சக்தி சிவத்தில் ஒடுங்கி, சிவம் பரத்தில் ஒடுங்கி, பரம் பிரம்மத்தில் ஒடுங்கும். இதுவே சிவசக்தி, பரமசிவம் மற்றும் பரப்பிரம்மம் ஆகும். இத்தன்மையே அண்டத்திலும் (புறம்) பிண்டத்திலும் (அகம்) வியாபிக்கிறது.

எனவே, சிவத்திலிருந்து சக்தி தோன்றினால் அது #லீலை. ஆனால் சிவத்தில் சக்தியானது ஒடுங்கினால் அது #நித்தியம். இதை எப்படி பிறித்தரிவதெனில், நாம் பூமியானது லீலையாகிய மாயை ஆகும். இங்கு சூரியனானது (சிவம்) சந்திரனில் (சக்தி) ஒடுங்கி பௌர்ணமி போன்ற மாயைப் பிம்பம் உண்டாகுமே தவிர நிஜத்தில் சூரியனானது சந்திரனில் ஒடுங்கவே ஒடுங்காது. அதாவது மாயையாகிய பூமிக்கே இந்த இருபடி (அமாவாசை/பௌர்ணமி) பிம்பங்கள் பிரதானமாகும்.

இன்னும் அறிவியல் பூர்வமாக விளக்கவேண்டுமெனில்,

#சிவம்/புரோட்டான்/இருப்பு
#சக்தி/எலெக்டரான்/இயக்கம்

எலெக்ரான் புரோட்டானை சுற்றுமே தவிர, புரோட்டான் எலெக்ட்ரானை ஒருபோதும் சுற்றாது. காரணம், புரோட்டான் நிலையானது.

எனவே, சிவமானது சக்தியில் ஒடுங்கினால் அச்சிருஷ்ட்டி அழிந்துவிடும். இதுபற்றி அறிவியலில் "பொருண்மை அழியா விதி" என ஒரு கோட்பாடுண்டு!

C.S.மல்லீஸ்குமார்
சென்னை

சரியை கிரியை யோகம் ஞானம்

1. பக்திமார்க்கம் தர்மத்தின் வழியில் சென்று சரணாகதி அடைவதற்கு

2. கர்மமார்க்கம் செய்யும் செயலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தவநிலையை அடைவதற்கு

3. யோகமார்க்கம் தவத்தால் காமத்தை கட்டுக்குள் வைத்து தன்னுள்ளிருக்கும் இறைதன்மையை உணர்வதற்கு

4. ஞானமார்க்கம் இறைநிலை உணர்வால் முக்தி (மோட்சம்) அடைவதற்கு

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

அகங்காரம்

இதன் பொருள் விளங்காமலேயே இதனை பயன்படுத்துவோர் ஏறாளம் மற்றும் எண்ணிலடங்கா. அகங்காரம் என்றால் என்ன..? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..?? அதென்ன அவ்வளவு பெரிய விசயமா..??? ஆமாம் அகங்காரம் மிகப்பெரிய விசயமே! காரணம், அகங்காரம் என்பது சக்தியின் வடிவம் (ஆங்காரி). நீங்கள் உங்கள் அகங்காரத்தை அடக்கி ஆள்கிறீர்கள் என்றால் உங்களில் இருக்கும் சக்தியை சிவத்தினுள் ஒடுங்கச் செய்கிறீர்கள் என்று பொருள்.

யாம் ஏற்கனவே எம்முடைய பதிவுகளில் கூறியுள்ளபடி எண்சான் உடம்பான இந்த ஸ்தூலம் மற்றும் சூட்சுமம் ஆகியவை சிவம் மற்றும் சக்தி ஆகிய இருபடி நிலைகளை தன்னகத்தே கொண்டு செயல்படுகிறது. ஏனெனில் இச்சிருஷ்டியில் இயக்கம் நடைபெற அவ்விருபடி நிலை மிக மிக அவசியம். ஒன்று ஆதாரமாகிய சிவம் (இருப்பு) மற்றொன்று ஆதரத்தைப் பற்றி இயங்கும் சக்தி (இயக்கம்). அதாவது ஸ்தூலமான பஞ்சபூதம் (நமசிவாய) சூட்சுமமாகிய நவசக்திகளுடன் (நவக்கிரகம்) தொடர்புகொள்ளும்போது அங்கு இயக்கம் நடைபெறும்.

இவ்விரண்டு தன்மைகளின் கலவைகளில் ஏற்படும் சிறு சிறு மாற்றமே நம்மில் ஏற்படும் பலவிதமான வேறுபாடுகளுக்கு காரணம். ஏனெனில் நாம் அனைவரும் வேறுபடுவது இந்த கலவைகளின் அடிப்படையில்தான். அதில் அவரவர் கட்டமைப்புக்கு ஏற்றவாறு இருப்பாகிய சிவமும், இயக்கமாகிய சக்தியின் தன்மையும் வேறுபடும். இத்தன்மைகளில் ஏற்படும் மாற்றமே நம்மில் வெளிப்படும் தேக/குணபேதங்களாகும். இதில் இயக்கமாகிய சக்தி இருப்பாகிய சிவத்தில் நின்று இயங்கும். இது தவிர காரணம் (மனம்) மஹாகாரணம் (ஆன்மா) எனவும் சூட்சுமத்தில் உள்ளது.

இத்தகைய சக்தியை ஒருவர் கட்டுக்குள் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அன்று. ஏனெனில், சக்தியானவள் கொண்டெழும்பி ஆடும் தன்மை கொண்டது. அதை அடக்கி ஆளவே இத்தனை யோகங்களும் தியானமுறைகளும் நடைமுறையில் உள்ளது. ஆம், யோக சாதனை செய்தவர்கள் அனைவருமே தன்னிலிருந்து வெளிப்படும் சக்தியை தனக்குள் இருக்கும் சிவத்துடன் ஒடுங்கச்செய்து எல்லாமாகிய பரபிரம்மத்தை உணர்ந்தார்கள். அதாவது, இருபடி நிலையிலிருந்து ஒருபடித்தன்மை நோக்கிய பயணமாகும்.

பொதுவாக அகங்காரம் இல்லாமல் மாயையாகிய இவ்வுலகம் இயங்காது. யாராக இருந்தாலும் ஒரு விசயத்தை வெளிப்படுத்த அகங்கரம் மிக அவசியம். ஆனால் அதன் அளவீடு மட்டும் வேறுபடும். உதாரணமாக ஒருவர் குரு தன்மையில் இருந்து உபதேசித்தாலும் தன்னை வெளிப்படுத்த அகங்காரம் அவசியம். அதாவது, அகங்காரம் இல்லாமல் எதையுமே வெளிப்படுத்த இயலாது.

எனில் இப்படிப்பட்ட சக்திமிகு அகங்காரத்தை அடக்கியாள்வது எவ்வாறு..? சாத்தியமா..? சாத்தியமே! காரணம், எங்கு அகங்காரமாகிய சக்தி இருக்கிறதோ அங்கே அதனை உள்வாங்கக்கூடிய இருப்பாகிய சிவமும் நிச்சயமிருக்கும். அப்படியெனில் சக்தியை சிவத்தினும் ஒடுங்கச் செய்வேண்டும். அது எவ்வாறெனில் ஞானிகளும் சித்த புருஷர்களும் பக்தி, கர்ம, யோக, ஞான மார்க்கங்கொண்டு சக்தியை சிவத்துடன் இணைத்து சித்தியடைந்தனர். இதில் மிகவும் எளிமையான ஆரம்பநிலை அடிப்படைமுறை என்பது பக்தி மார்க்கமாகிய சரணாகதியாகும்.

அதாவது இறை துதி பாடல், எந்தேரமும் இறைவனை போற்றி வணங்குதல், அடியார்க்கு சேவை செய்தல் என்பனவாகும். அது தவிர பொதுவாழ்வில் சிகையுதிர்த்தல், பிச்சையெடுத்தல், ஆடையைக் களைதல் (கோவணம், நிர்வாணம்) என்பதுதான் சரணாகதியின் முதற்படி. காரணம் ஒருவருடைய அகங்காரம் என்பது மேற்சொன்ன மூன்று செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கும். அதாவது சிகையலங்காரம், தன்மான உணர்வு மற்றும் ஆடை அலங்காரம் ஆகியவையே நம் வெளிப்புற அகங்காரத்தைப் பற்றி நிற்கும் தூண்களாகும். அதனால்தான் இன்னமும் குருகுல சன்யாசத்தில் மொட்டையடித்து பிச்சை எடுக்க வைப்பது பிரதான செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கிறது.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை