Monday, 28 September 2020

சரியை கிரியை யோகம் ஞானம்

1. பக்திமார்க்கம் தர்மத்தின் வழியில் சென்று சரணாகதி அடைவதற்கு

2. கர்மமார்க்கம் செய்யும் செயலில் தன்னை முழுமையாக அர்ப்பணித்து தவநிலையை அடைவதற்கு

3. யோகமார்க்கம் தவத்தால் காமத்தை கட்டுக்குள் வைத்து தன்னுள்ளிருக்கும் இறைதன்மையை உணர்வதற்கு

4. ஞானமார்க்கம் இறைநிலை உணர்வால் முக்தி (மோட்சம்) அடைவதற்கு

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

ஆன்மீக ஆலாபனைகள்

"ஆன்மீகம்" என்பது நபருக்கு நபர் வேறுபடும். அதாவது பக்தி, கர்மம், யோகம், ஞானம் என அவரவர் தன்மைக்கு ஏற்றவாறு ஆன்மீகப் புரிதல் இருக்கும். பெரும்பாலான ஆன்மீகவாதிகள் பக்தி மார்க்கத்தையே கடைபிடிக்கின்றனர். காரணம், அதுவே ஆன்மீகத்தின் அடிப்படையுமாகும். அதன் இறுதிநிலை என்பது சரணாகதியாகும்.

ஆன்மீகம்:

"நம் மூலத்தை நோக்கிய பயணமே ஆன்மீகமாகும்". காலத்திற்கு ஏற்றவாறு ஆன்மீகப் பயணத்தில் மேற்கூறிய படிகளுண்டு. ஆனால், அந்த மூலம் என்பது இறைவன், பிரம்மம், சிவன், ஆன்மா என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம், தவிர அதுவே முதன்மையாகும்.

கலியுகத்தில் ஆன்மீகம்:

கலியில் ஆன்மீகம் என்பது மாயையாகவே சித்தரிக்கப்படுகிறது. அதாவது அருவுருவற்ற இறைவனுக்கே உருவம் தரித்து வழிபடும் தன்மை பிரதானமாயிருக்கிறது. காரணம், மனமாகிய மாயைக்கு ஒரு கற்பனை உருவம் தேவைப்படுகிறது. அப்படியிருந்தால் மட்டுமே அது இறைவனை நிந்திக்கும். அதுவே மனத்தின் இயல்பும்கூட. இதுகூட நபருக்கு நபர் அவரவர் புரிதல் உணர்தலைப் பொருத்து வேறுபடும். அதாவது சிலர், இருக்கும் இடத்திலிருந்தே அகத்தில் இறைவனை உணர்ந்து ஏகாந்தத்தில் திளைப்பர், ஆனால் சிலருக்கு சிலையோ அல்லது படத்தையோ பார்த்தால்தான் பக்தி உருவெடுக்கும். இவையெல்லாம் முழுக்க முழக்க மனத்தின் மாயை சார்ந்த விசயங்களே!

முனிவர்கள்

அவரவர் இருக்கும் இறைநிலைத் தன்மையைப் பொறுத்து பெயர்கள் வேறுபடும் அதாவது கிரகஸ்தன், உபாசகர், யோகி, சாமியார், துறவி, சந்யாசி, தபசி, முனிவர் சித்தர், பித்தர், மஹரிஷி மற்றும் தேவர்கள் என வேறுபடும். ஆனால் அக்காலத்திலிருந்த ஆன்மீகவாதிகள் உடுத்தும் உடைகளுக்கும் வேஷங்களுக்கும் காரண/காரியமிருந்தது. அதாவது பிரபஞ்ச சக்தியை ஈர்க்க குடுமியும், தாடியும், தன்னில் இருக்கும் இறைசக்தி உச்சந்தலை (பத்தாவது வாசல்) வழியாக வெளியேறாமல் இருக்க உச்சிக்குடுமியும், விந்துவைக் கட்ட கோவணமும், மந்திர உச்சாடனைகளை எண்ண மணி மாலையும், பிரபஞ்ச சக்தியை தன்னுள் ஈரக்க நவக்கிரக மற்றும் ருத்ராக்ஷ கொட்டைகளும், உடலில் வியர்வை தங்காமலும், ஈரத்தை உறிஞ்ச விபூதி பட்டைகளும், உடலை குளுமையாக்க சந்தனமும் தரித்தனர். ஆனால், இவை அனைத்துமே சில குறிப்பிட்ட வரையறைக்குட்பட்டவை. காரணம் காடுகளிலும், மலைப் பாறைகளிலும், கடுங்குளிரிலும் இருப்பவர்களுக்கே இது விசயமாகும்.

நவீன சாமியார்கள்:

தாடியும் குடுமியும் வளர்த்து பட்டை போட்டு, கொட்டையிட்டு, காவியுடுத்தினால்தான் இறைநிலை வாய்க்குமா..? அப்படியிருந்தால்தான் ஆன்மீகத்தின் உச்சநிலையை தொட இயலுமா..? இல்லை, காரணம் அவையெல்லாம் மேற்சொன்ன அடிப்படை ஆன்மீக விசயங்களுடன் சேர்த்து, நான் இயமம், நியமம், பிரத்தியாகாரம், தாரணை, பக்தி, யோக, தியான மற்றும் சன்மார்க்க நெறிகளைக் கடைபிடித்து உணவு, உடை, இருப்பிடம் மற்றும் செயல்பாடுகள் என அனைத்து விதங்களிலும் உங்களிடமிருந்து வேறுபட்டு தனித்துவமாகவும், மந்திரம், பூஜை, ஹோமம் என்கிற வேத சம்பத்துக்களைக் கடைபிடித்து அனுஷரிப்பதால் எம்மைவிட்டு சற்று விலகி இருப்பாயாக, காரணம் என்னுடைய இறைசக்தி நிலை உங்களால் தடைபடக்கூடாது என்பதை உணர்த்தும் சமிக்கைகளே, தவிர அது மட்டுமே இறைநிலையாகாது. இன்னும் சரியாகக் கூறவேண்டுமெனில் "அரை நிர்வானக் கோவணமும், முழுநிர்வாணமுமே" ஆன்மீகத்தின் நிரந்தர ஆடையாகும்.

ஆன்மீக ஸ்வரூபிகள்:

மஹா அவதார் பாபா, ஆதிசங்கரர், புத்தர் மற்றும் அருட்பிரகாச வள்ளலார் போன்றோர் மேற்கூறிய சாயல்களுக்கு அதிக முக்கியத்துவம் தராமல் உச்சகட்ட இறைநிலை அடைந்தவர்கள். காரணம், அவர்கள் ஞானத்தால் அகத்திலிருக்கும் இறைவனை (ஆன்மா) உணர்ந்து இறைவனாக மாறியவர்கள். இதற்கு எந்த விதமான விளக்கமோ, வியாக்கானமோ தேவைப்படாது. அதாவது, அகத்தை நோக்கிய பயணத்தில் ஒரு நிலையிலிருந்து அடுத்தநிலை வியாபிக்குமே, தவிர வேஷம் தரிப்பது என்பது எம்மிடமிருந்து விலகி இரு என்பதை அறிவறுத்தவே என்றுகூறி நிறைவு செய்கிறேன், நன்றி!

குறிப்பு: வேஷம் தரிக்ககூடாது என்பது பதிவின் நோக்கமல்ல, தவிர ஏன் மற்றும் எப்போது தரிக்கவேண்டும் என்பது பற்றி அறியாதவர்களுக்கு இது ஒரு பயனுள்ள பதிவாகும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

அகங்காரம்

இதன் பொருள் விளங்காமலேயே இதனை பயன்படுத்துவோர் ஏறாளம் மற்றும் எண்ணிலடங்கா. அகங்காரம் என்றால் என்ன..? அதற்கு ஏன் இவ்வளவு முக்கியத்துவம்..?? அதென்ன அவ்வளவு பெரிய விசயமா..??? ஆமாம் அகங்காரம் மிகப்பெரிய விசயமே! காரணம், அகங்காரம் என்பது சக்தியின் வடிவம் (ஆங்காரி). நீங்கள் உங்கள் அகங்காரத்தை அடக்கி ஆள்கிறீர்கள் என்றால் உங்களில் இருக்கும் சக்தியை சிவத்தினுள் ஒடுங்கச் செய்கிறீர்கள் என்று பொருள்.

யாம் ஏற்கனவே எம்முடைய பதிவுகளில் கூறியுள்ளபடி எண்சான் உடம்பான இந்த ஸ்தூலம் மற்றும் சூட்சுமம் ஆகியவை சிவம் மற்றும் சக்தி ஆகிய இருபடி நிலைகளை தன்னகத்தே கொண்டு செயல்படுகிறது. ஏனெனில் இச்சிருஷ்டியில் இயக்கம் நடைபெற அவ்விருபடி நிலை மிக மிக அவசியம். ஒன்று ஆதாரமாகிய சிவம் (இருப்பு) மற்றொன்று ஆதரத்தைப் பற்றி இயங்கும் சக்தி (இயக்கம்). அதாவது ஸ்தூலமான பஞ்சபூதம் (நமசிவாய) சூட்சுமமாகிய நவசக்திகளுடன் (நவக்கிரகம்) தொடர்புகொள்ளும்போது அங்கு இயக்கம் நடைபெறும்.

இவ்விரண்டு தன்மைகளின் கலவைகளில் ஏற்படும் சிறு சிறு மாற்றமே நம்மில் ஏற்படும் பலவிதமான வேறுபாடுகளுக்கு காரணம். ஏனெனில் நாம் அனைவரும் வேறுபடுவது இந்த கலவைகளின் அடிப்படையில்தான். அதில் அவரவர் கட்டமைப்புக்கு ஏற்றவாறு இருப்பாகிய சிவமும், இயக்கமாகிய சக்தியின் தன்மையும் வேறுபடும். இத்தன்மைகளில் ஏற்படும் மாற்றமே நம்மில் வெளிப்படும் தேக/குணபேதங்களாகும். இதில் இயக்கமாகிய சக்தி இருப்பாகிய சிவத்தில் நின்று இயங்கும். இது தவிர காரணம் (மனம்) மஹாகாரணம் (ஆன்மா) எனவும் சூட்சுமத்தில் உள்ளது.

இத்தகைய சக்தியை ஒருவர் கட்டுக்குள் வைப்பது என்பது அவ்வளவு சுலபமான காரியம் அன்று. ஏனெனில், சக்தியானவள் கொண்டெழும்பி ஆடும் தன்மை கொண்டது. அதை அடக்கி ஆளவே இத்தனை யோகங்களும் தியானமுறைகளும் நடைமுறையில் உள்ளது. ஆம், யோக சாதனை செய்தவர்கள் அனைவருமே தன்னிலிருந்து வெளிப்படும் சக்தியை தனக்குள் இருக்கும் சிவத்துடன் ஒடுங்கச்செய்து எல்லாமாகிய பரபிரம்மத்தை உணர்ந்தார்கள். அதாவது, இருபடி நிலையிலிருந்து ஒருபடித்தன்மை நோக்கிய பயணமாகும்.

பொதுவாக அகங்காரம் இல்லாமல் மாயையாகிய இவ்வுலகம் இயங்காது. யாராக இருந்தாலும் ஒரு விசயத்தை வெளிப்படுத்த அகங்கரம் மிக அவசியம். ஆனால் அதன் அளவீடு மட்டும் வேறுபடும். உதாரணமாக ஒருவர் குரு தன்மையில் இருந்து உபதேசித்தாலும் தன்னை வெளிப்படுத்த அகங்காரம் அவசியம். அதாவது, அகங்காரம் இல்லாமல் எதையுமே வெளிப்படுத்த இயலாது.

எனில் இப்படிப்பட்ட சக்திமிகு அகங்காரத்தை அடக்கியாள்வது எவ்வாறு..? சாத்தியமா..? சாத்தியமே! காரணம், எங்கு அகங்காரமாகிய சக்தி இருக்கிறதோ அங்கே அதனை உள்வாங்கக்கூடிய இருப்பாகிய சிவமும் நிச்சயமிருக்கும். அப்படியெனில் சக்தியை சிவத்தினும் ஒடுங்கச் செய்வேண்டும். அது எவ்வாறெனில் ஞானிகளும் சித்த புருஷர்களும் பக்தி, கர்ம, யோக, ஞான மார்க்கங்கொண்டு சக்தியை சிவத்துடன் இணைத்து சித்தியடைந்தனர். இதில் மிகவும் எளிமையான ஆரம்பநிலை அடிப்படைமுறை என்பது பக்தி மார்க்கமாகிய சரணாகதியாகும்.

அதாவது இறை துதி பாடல், எந்தேரமும் இறைவனை போற்றி வணங்குதல், அடியார்க்கு சேவை செய்தல் என்பனவாகும். அது தவிர பொதுவாழ்வில் சிகையுதிர்த்தல், பிச்சையெடுத்தல், ஆடையைக் களைதல் (கோவணம், நிர்வாணம்) என்பதுதான் சரணாகதியின் முதற்படி. காரணம் ஒருவருடைய அகங்காரம் என்பது மேற்சொன்ன மூன்று செயல்பாடுகளைச் சார்ந்தே இருக்கும். அதாவது சிகையலங்காரம், தன்மான உணர்வு மற்றும் ஆடை அலங்காரம் ஆகியவையே நம் வெளிப்புற அகங்காரத்தைப் பற்றி நிற்கும் தூண்களாகும். அதனால்தான் இன்னமும் குருகுல சன்யாசத்தில் மொட்டையடித்து பிச்சை எடுக்க வைப்பது பிரதான செயல்பாடுகளில் ஒன்றாய் இருக்கிறது.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

காமமும் தட்சிணாயணகால விரதமுறைகளும்

பொதுவாழ்வில் ஆண் / பெண் உணர்வுகளானது குறிப்பிட்ட பருவ காலவங்களில் எவ்வாறு செயல்படுகிறது என்பதை சாஸ்திர விதிகளுடன் தொடர்புபடுத்தி விளக்க முயல்கிறேன். சாஸ்திரம் வகுத்த நம் முன்னோர்கள் எந்த ஒரு விதியைப் பற்றியும் நேரடியாகச் சொல்லவில்லை. காரணத்தை மறைத்து காரியத்தை மட்டும் செய்யச் சொல்லியிருப்பார்கள். இதை வழுவாமல் இப்படியே கடைபிடிக்க வேண்டும் என்பது சாஸ்திரத்தின் விதிமுறையாய் இருக்கும்.

அதுபோலவே நாம் வாழும் பூமியில் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் பருவகால மாற்றத்தை நம் முன்னோர்கள்  கணக்கிட்டு, அது சார்ந்த வாழ்வாதார முறைகளை சாஸ்திரமாக வகுத்தனர். அதாவது ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்படும் மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகள் என்பது சித்திரை முதல் பங்குனி வரையிலான 12 தமிழ் மாதங்களைக் குறிப்பனவையாகும். இதன் மொத்தம் 360 பாகைகளை உள்ளடக்கிய ஒரு வட்டமாகும்.

இது எவ்வாறு தீர்மானிக்கப்பட்டது எனில், சூரியன் ஒரு ராசியல் இருக்கும்போது அதன் எதிர் நிலையான ஏழாம் பாவத்தில் (180 பாகைகள்) சந்திரன் வரும் காலம் பௌர்ணமியாகும். அப்போது ஒரு குறிப்பிட்ட நட்சத்திரத்தின் மீது சந்திரன் வரும்போது முழுமையாகப் பிரகாசிக்கும். 

தமிழ்மாதம் − பௌர்ணமி வரும் நட்சத்திரம்

1. சித்திரை − சித்திரை (சித்ரா பௌர்ணமி)
2. வைகாசி − விசாகம்
3. ஆணி − மூலம்
4. ஆடி − உத்திராடம்
5. ஆவணி − அவிட்டம்
6. புரட்டாசி − உத்திரட்டாதி
7. ஐப்பசி − அஸ்வினி
8. கார்த்திகை − கார்த்திகை (திருக்கார்த்திகை)
9. மார்கழி − திருவாதரை
10. தை − பூசம்
11. மாசி − மகம்
12. பங்குனி − உத்திரம்

மேற்கண்ட நட்சத்திரத்தன்று ஏற்படும் பௌர்ணமி காலத்தில் பூமியில் கிடைக்கும் சக்தியோ ஏறாளம். அத்தகைய அளப்பரிய சக்தியை மனிதன் தன் கட்டுப்பாட்டிற்குள் வைக்க அந்தந்த மாதங்களில் அக்குறிப்பட்ட நட்சத்திரங்களின் பெயரில் விரத முறைகளும், விழாக்களும் எடுக்கப்பட்டது.

இது தவிர மகர ராசியான தை மாதம் முதல், மிதுன ராசியான ஆணி மாதம் வரை "உத்திராயணம்" எனவும், கடக ரிசியான ஆடி மாதம் முதல் தணுசு ரிசியான மார்கழி வரை "தட்சிணாயணம்" எனவும் குறிப்பட்டார்கள். காரணம் உத்திராயண காலத்தில் சூரியன் "வடக்கு" நோக்கியும், தட்சிணாயண காலத்தில் "தெற்கு நோக்கியும்" பயணிக்கும். இதில் விசேஷம் என்னவெனில் சூரியன், தை மாதத்திலிருந்து ஆணி நோக்கி பயணிக்கும் உத்ராயண காலம் "உஷ்ணம்" மிகுந்தும், ஆடியிலிருந்து மார்கழிவரை பயணிக்கும் தட்சிணாண காலம் "குளிர்ச்சி" மிகுந்து காணப்படும். ஏனெனில், உஷ்ண காலங்களில் சூரியன் பூமிக்கு அருகிலும், குளிர்ச்சியான காலங்களில் சூரியன் பூமியைவிட்டு விலகியும் இருக்கும்.

இங்குதான் பதிவின் காமப் பகுதியே ஆரம்பகிறது. இதற்கும் உடலில் உண்டாகும் காம எண்ணத்திற்கும் என்ன சம்பந்தம் இருக்கிறது என ஐயம் வரலாம். நம் ஆத்மாவானது ஐவகை அக்கினிகளைக் கொண்டெழுப்பும் தன்மை கொண்டது. அந்த ஐவகை அக்கினிகளே நம் உடலின் வெப்பத்தைச் சீராக்கி சமநிலையில் வைக்கிறது. அவை,

ஐவகை அக்கினிகள்:

1. போகாக்கினி (பசியுணர்வு)
2. மோகாக்கினி (மோக உணர்வு)
3. காமாக்கினி (காம உணர்வு)
4. தாபாக்கினி (ஆசையுணர்வு)
5. ஞானாக்கினி (ஞானம்)

ஆன்மாவின் இந்த வெப்பச் சமநிலைக்கும், பூமியில் சூரியனின் பருவகால மாற்றத்திற்கும் என்ன தொடர்பு உள்ளது என்றால், உத்ராயணமான உஷ்ண காலத்தில் நம் உடலின் வெப்பநிலையானது குறைந்தும், தட்சாயிணாயிணமான குளிர்காலத்தில் உடலில் வெப்பநிலையானது அதிகரித்தும் காணப்படும். அதாவது நம் ஆத்மாவானது புறத்தில் வெப்பம் மிகுதியாக இருக்கும்போது அகத்தில் வெப்பத்தைக் குறைத்தும், புறத்தில் வெப்பம் குறைந்து இருக்கும்போது அகத்தில் வெப்பத்தை அதிகரித்தும் உடலின் வெப்பச் சமநிலையை சீராக்கும்.

விசயம் யாதெனில், எப்போது உடலின்   வெப்பநிலை ஆத்மாவால் கொண்டெழுப்படுகிறதோ அப்போதெல்லாம் உடலின் காம இச்சை அதிகரிக்கும். குறிப்பாக சூரியன் பூமியைவிட்டு 151 பாகை முதல் 270 பாகை வரையிலான தட்சிணாயின காலம் என்பது புரட்டாசி முதல் மார்கழி வரையிலான "குளிர்காலமாகும்". இந்த மாதங்களில் புவியில் ஜனிக்கும் உயிரினங்களுக்கு இப்பெருக்க காலமாகும். அதாவது அந்தக் காலங்களில் அதிகப்படியான காம இச்சைகள் ஆத்மாவால் கொண்டெழுப்பப்படும்.

குறிப்பிட்டுள்ள நட்சத்திர காலங்களில் ஏற்படும் பௌர்ணமி ஒளியால் பூமியில் அளப்பரிய சக்தி உண்டாக்கும் என மேலே குறிப்பிட்டிருக்கிறேன். அச்சக்தியானது நம் உடலின் வெப்ப சக்தியோடு சேரும்போது உடலானது புத்துணர்ச்சியால் கிளர்ச்சியடைந்து வரைமுறையற்ற காமத்தை வெளிப்படுத்தும். அதானாலேயே, புரட்டாசி முதல் மார்கழி வரையிலான குளிர்காலத்தில் அதிகப்படியான விரத முறைகளும், விழாக்களும் இறைவனின் பெயரில் அனுசரிக்கப்படுகிறது. அதாவது #புரட்டாசியில் பெருமாளுக்கு விரதம் மற்றும் நவராத்திரி / விஜயதசமி நோன்பு, #ஐப்பசியில் தீபாவளிப்பண்டிகை, #கார்த்திகையில் முருகனுக்கு திருக்கார்த்திகை விரதம் மற்றும் ஐயப்பனுக்கு விரதமிருந்து மாலையணியதலும், #மார்கழியில் திருப்பாவை மற்றும் திருவெம்பாவை நோன்பும் இறைவனின் பெயரில் அனுசரிக்கப்பட்டு காம உணர்வுகள் கட்டுக்குள் வைக்கப்பட்டது. இதுவே நம் முன்னோர்கள் வகுத்த அதிவிஞ்ஞான சாஸ்திரமாகும்.

மேலும் புரட்டாசியானது / ஆண்களுக்கும் மார்கழியானது / பெண்களுக்கும் உரித்தான காலமாகும். அதாவது புரட்டாசியில் ஆணின் உணர்வுகள் வக்கிரமாகவும், மார்கழியில் பெண்ணின் உணர்வுகள் வக்கிரமாகவும், ஐப்பசி மற்றும் கார்த்திகை மாதங்களில் இருவரின் உணர்வுகள் சமநிலையிலும் இருக்கும். அதனாலேயே புரட்டாசி மாதம் ஆண்களின் விரத காலமாகவும்,  மார்கழிமாதம் பெண்களுக்கு திருப்பாவை நோன்பு காலமாகவும் பிரிக்கப்பட்டது. இவ்விரண்டு மாதங்களிலும் களத்திரக் (திருமண) காரகரான பெருமாளே பிரதானக் கடவுளாகும், நன்றி!

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

கர்மாவை ஏன் மாற்றியமைக்க இயலாது..?

ஒரு விதையில் உள்ள வித்தின் கட்டமைப்பானது தீர்மானிக்கப்பட்ட குணத்தைப் பெற்றிருக்கும். அதாவது காலங்காலமாக அதன் முன்னோர்களால் கடத்தப்பட்ட குணங்கள் அனைத்தும் அவ்வித்தில் பூரணமாய் பரணமித்திருக்கும். மேலும், அது காலத்தால் விரிந்து வித்தில் உள்ள குணபேதத்தை காலத்தால் வெளிப்படுத்துமே, தவிர வித்தின் கட்டமைப்பைத் தாண்டிய தன்மைகள் ஒருபோதும் வெளிப்படாது.

அதுபோலவே, ஒரு மனிதக் கருவின் கர்மக்கட்டமைப்பும் அது கருவுற்றபோதே அதன் குணமானது தீர்மானிக்கப்பட்டு, காலத்தால் குணபேங்களாக விரிந்து வெளிப்படுமே, தவிர கட்டமைப்பிற்கு அப்பாற்பட்ட தன்மைகள் ஒருபோதும் வெளிப்படாது. இதுவே சிருஷ்ட்டி தத்துவமாகும்.

இதில் விசயம் என்னவெனில் ஒருமுறை கட்டமைக்கப்பட்டுவிட்டால் அதை யாராலும் மாற்றியமைக்க இயலாது. மீறி மாற்றியமைக்க முற்பட்டால் அது அழிந்துவிடும். அந்தக் கட்டமைப்புதான் "கர்மா" ஆகும். அதன் விளைவே கர்மவினையாகும். இதில் உடலானது கர்மவினையை தாங்கும் காரியப் பொருளாகவும், உயிர்/ஆன்மா அவ்வுடல் இயங்குவதற்கு காரணப் பொருளாகவும் மற்றும் மனம் அதனை இயக்கும் காரணியாகவும் இருந்து செயல்படும்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

எட்டில் சனி பகவான்

ஜாதகத்தில் லக்கினம் அல்லது சந்திரனுக்கு 8ல் சனி இருப்பவர்கள் தினம் தினம் போராடி ஜெயிக்க வேண்டும். வாழ்வில் பலவிதமான சோதனைகளைக் கடந்து எதிர் நீச்சல் போட வேண்டும். அதிலும் சனி திசை அல்லது ஏழரைச்சனி அல்லது அஷ்ம சனி தொடர்புண்டானால் தீராத நோய், தொடர் மனக்கவலைகள், விரக்தி, காரணமில்லா பயம், தற்கொலை எண்ணம் போன்றவை தலை தூக்கும்!

பரிகாரம்:

1. நெல்லிக்காய் சாறு குடித்தல், பூமிக்கு கீழ் விளையும் உணவுப் பொருட்களை உண்ணுதல்

2. ஶ்ரீரங்கம், திருப்பதி போன்ற பெருமாள் ஸ்தலங்கள், ஐயப்பன் கோவில் வழிபாடு மற்றும் முருகனின் அறுபடை வீடுகள் வழிபாடு, அதில் குறிப்பாக திருச்செந்தூர் முருகன் சன்னதி வழிபாடு நன்மை தரும்.

3. காலபைரவ மற்றும் துர்க்கை வழிபாடு

C.S.மல்லீஸ் குமார்
சென்னை

நவக்கிரக ஸ்தலங்களும்; மறைக்கப்பட்ட உண்மைகளும்

தமிழ்நாட்டில் இருக்கும் அனைத்து நவக்கிரகக் கோவில்களிலும் மூலவர் சிவனாகவும், கிரக சிலையை தனியாகவும் வைத்திருப்பர். உண்மையில் தனியாக வைக்கப்பட்டிருக்கும் கிரகமானது உற்சவரே, தவிர அக்கோவிலில் பிரதானமாக இருக்கும் மூலவரிடத்து அக்கிரக சக்திகள் (மந்திர/யந்திர) தீர்மானிக்கப்பட்டிருக்கும். அங்குதான் அக்கிரத்தின் சக்தியோட்டம் அபரிவிதமாக வெளிப்படும்.

அதாவது, எந்த ஒரு நவக்கிர சக்தியும் தனித்து இயங்காது. காரணம், அவற்றின் இயக்க பரிணாமத்திற்கு பஞ்சபூதத் தன்மைகள் அல்லது தத்துவங்களின் சேர்க்கை மிகமிக அவசியம். நான் ஏற்கனவே எம் பதிவுகளில் குறிப்பிட்டிருந்த தன்மை மற்றும் தத்துவங்களைக் கீழே காணலாம்:−

தத்துவங்கள்/தன்மைகள்

ந−மண்/ருத்ரன்
ம−நீ்ர்/அர்த்தநாரீ
சி−நெருப்பு/காலபைரவ
வா−காற்று/நடராஜ
ய−ஆகாயம்/சதாசிவ

ஆக மேற்கூறிய தன்மை/தத்துவங்களுக்கு ஏற்றார்போல நவக்கிரக சக்திகள் மந்திர/யந்திரமாகவோ அல்லது அவ்விடத்தில் இயற்கையாக விரவிக்கிடக்கும் நவக்கிர சக்தியை ஒருமித்தோ அவற்றை பஞ்சபூதத்துடன் சேர்த்து தீர்மானித்து, அக்கலவையை நம் ஸ்தூல உட்கிரகித்தலுக்கு காரியமாகிக்கியுள்ளனர், தவிர எந்த ஒரு நவக்கிரகமும் பஞ்சபூத அம்சமில்லாமல் தனித்து இயங்காது. இங்கு, பஞ்சபூதம்−காரணம்; நவக்கிரகம்−காரியம்.

நவக்கிரக_ஸ்தலங்கள்

1. ஆடுதுறை / சிவசூரியனார் + சூரியன்
2. திங்களூர் / கைலாசநாதர் + சந்திரன்
3. சீர்காழி / வைத்தீஸ்வரர் + செவ்வாய்
4. திருவெண்காடு / சுவேதாரண்யேஸ்வரர் + புதன்
5. ஆலங்குடி / ஆபத்சகாயேஸ்வரர் + குரு
6. கஞ்சனூர் / அக்னீஸ்வரர் + சுக்கிரன்
7. திருநள்ளாறு / தர்பாரண்யேஸ்வரர் + சனி
8. திருநாகேஷ்வரம் / நாகநாதர் + ராகு
9. கீழ்ப்பெரும்பள்ளம் / நாகநாதர் + கேது

ஆக, உற்சவ கிரகத்தை தரிசிப்பதற்காக வரிசைகளில் நின்று கஷ்டப்படுவதை விடுத்து, பஞ்சபூத/நவக்கிரக சக்திகள் பிரதானமாக தீர்மானிக்கப்பட்டிருக்கும் மூலவரை தரிஷித்து அனுக்கிரகம் பெறுங்கள்.

C.S.மல்லீஸ் குமார்
சென்னை